நீட் விவகாரம்: தர்மேந்திர பிரதான் ராஜினாமா கோரி புதுக்கோட்டையில் மாணவர்கள் போராட்டம்
நீட் (NEET) தேர்வு முறைகேடு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, புதுக்கோட்டையில் இந்திய ஜனநாயக மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், “ஜனநாயகனா..? ஜனநாயகமா..? தமிழக மக்களின் தீர்ப்பு யார் பக்கம்?” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
நீட் தேர்வில் தொடர்ந்து எழுந்து வரும் முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக பொறுப்பேற்று, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
மேலும், மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் தேர்வு முறைகேடுகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், தேர்வு அமைப்பில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
நீட் விவகாரத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மாணவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், புதுக்கோட்டையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டமும் கவனம் ஈர்த்துள்ளது.
