உத்தரப்பிரதேச தேர்தல்: சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணிக்கு தயாராக உள்ளோம் – அசாதுதீன் ஒவைசி
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாக அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தெஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “உத்தரப்பிரதேச பேரவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த இதுவே சரியான தருணம்” என்றார்.
மேலும், “இந்த வாய்ப்பை தற்போது பயன்படுத்தாமல் நிராகரித்துவிட்டு, தேர்தலுக்குப் பிறகு வருத்தப்படுவதால் எந்தப் பயனும் இருக்காது” என்றும் ஒவைசி குறிப்பிட்டார்.
உத்தரப்பிரதேச அரசியலில் எதிர்க்கட்சிகளின் வாக்குகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஒவைசியின் இந்த கருத்து அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சமாஜ்வாதி கட்சி இந்த கூட்டணி அழைப்புக்கு என்ன பதில் அளிக்கிறது என்பது உத்தரப்பிரதேச தேர்தல் அரசியலில் அடுத்தகட்ட நகர்வுகளை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
