சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்: காந்தியின் கொள்கையை நினைவூட்டும் போராட்டமா?
சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து, அநீதியை செய்தவர்களின் மனசாட்சியை மாற்றிய மகாத்மா காந்தி, 1932 அக்டோபர் 30 அன்று உண்ணாவிரதம் குறித்து முக்கியமான கருத்தை பதிவு செய்திருந்தார்.
“காலவரையற்ற உண்ணாவிரதத்திற்கு நான் விதிமுறைகளை வகுக்க முடியாது. ஆனால், ஒரு உண்ணாவிரதம் முழுமையான உண்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அது ஒருவரின் மனசாட்சியின் உந்துதலால் மட்டுமே இருக்க வேண்டும்; மற்றவர்களைப் பின்பற்றும் நோக்கத்தில் இருக்கக் கூடாது. சுயநலத்திற்காக உண்ணாவிரதம் இருக்கக் கூடாது. அதன் நோக்கம் பொதுநலனாக இருக்க வேண்டும். யாரிடமும் பகைமை கொண்ட நோக்கத்துடன் உண்ணாவிரதம் மேற்கொள்ளக் கூடாது” என்று காந்தி குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கருத்துகள் தற்போது டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் போராட்டத்துடன் ஒப்பிட்டு பேசப்படுகின்றன.
சோனம் வாங்சுக், ஜூன் 28 முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளார். Cockroach Janta Party (CJP) முன்னெடுத்து வரும் இந்தப் போராட்டம், நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவுகள், பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீட்டில் ஏற்பட்டதாகக் கூறப்படும் குளறுபடிகள் மற்றும் கல்வி அமைப்பில் சீர்திருத்தம் கோரி நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், லடாக்கிற்கு அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும், நாட்டின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பனவும் இந்தப் போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளாக கூறப்படுகின்றன.
சுற்றுச்சூழல் ஆர்வலர், கண்டுபிடிப்பாளர், பொறியாளர் மற்றும் ராமன் மக்சேசே விருது பெற்றவரான சோனம் வாங்சுக், இந்தப் போராட்டத்தின் மூலம் மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தையே முன்வைத்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
