டிஎம்சிக்கு ஆம் ஆத்மி கட்சியின் நிலையா? பாஜகவை அணுகும் மம்தா கட்சியின் அதிருப்தி எம்.பி.க்கள்!
மேற்கு வங்க மாநிலத்தில் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் (TMC) கட்சி ஆட்சியை இழந்தது. இந்தத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அக்கட்சியில் உட்கட்சிப் பூசல் மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது. தற்போது டிஎம்சி கட்சியின் முக்கிய எம்.பி-க்கள் சிலர் பாஜகவை அணுக முயற்சிப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் ராகவ் சத்தா தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் 7 மாநிலங்களவை எம்.பி-க்கள் திடீரென பாஜகவில் இணைந்தனர். அதே போன்ற ஒரு நிலை தற்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அபிஷேக் பானர்ஜிக்கு எதிராக வெடித்த அதிருப்தி!
முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜிக்கு எதிராகக் கட்சிக்குள் ஒரு பிரிவினர் வெளிப்படையாகவே போர்க்கொடி தூக்கியுள்ளனர். தேர்தல் வேட்பாளர் தேர்வில் அபிஷேக் தன்னிச்சையாகச் செயல்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதன் காரணமாகவே, டிஎம்சி கட்சியின் முக்கிய நாடாளுமன்ற எம்.பி-யான ககோலி கோஷ் தஸ்திதார் உட்படப் பல சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி கூட்டங்களைப் புறக்கணித்து வருகின்றனர். இந்த அதிருப்தித் தலைவர்கள் பலர் தற்போது பாஜக தலைவர்களுடன் ரகசியத் தொடர்பில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜகவின் ராஜதந்திர நகர்வு மற்றும் தற்காலிகத் தடை
அதிருப்தி தலைவர்களைக் கட்சியில் இணைத்துக் கொள்வது குறித்து அவசரப்படாமல், நிதானமாக முடிவு எடுக்கப் பாஜக திட்டமிட்டுள்ளது. மேற்கு வங்க தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு டிஎம்சி தொண்டர்களைக் கட்சியில் சேர்க்கப் பாஜக தற்காலிகத் தடை விதித்துள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குத் தற்போது மாநிலங்களவையில் 13 எம்.பி-க்களும், மக்களவையில் 28 எம்.பி-க்களும் உள்ளனர். தேர்தல் தோல்விக்குப் பின் கட்சியில் தங்களுக்கு எதிர்காலம் இல்லை என்று இவர்கள் கருதுகின்றனர்.
மாநிலங்களவையில் தனிப் பெரும்பான்மை பெற பாஜக திட்டம்!
நாடாளுமன்ற மாநிலங்களவையில் (Rajya Sabha) பெரும்பான்மை பெற 113 எம்.பி-க்கள் தேவைப்படுகின்றனர். தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளைச் சேர்த்தால் மட்டுமே பாஜகவுக்கு அங்குப் பெரும்பான்மை பலம் உள்ளது.
ஒருவேளை டிஎம்சி மாநிலங்களவை எம்.பி-க்கள் பாஜகவில் இணைந்தால், பாஜகவுக்குத் தனிப் பெரும்பான்மை பலம் கிடைக்க வாய்ப்புள்ளது. இது நடந்தால், நிலுவையில் உள்ள மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டத்தை நாடு முழுவதும் அமலாக்கப் பாஜக மீண்டும் தீவிர முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
