
2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் நேர்காணல் குறித்த முக்கிய விவரங்களைப் பகிர்ந்து தொண்டர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஜனநாயக ரீதியிலான தொகுதிப் பங்கீடு
கடந்த ஐந்தாண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள முதல்வர், கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகளுடன் மிகவும் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தைகள் நிறைவு பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். விகசி, கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க, ஐ.யு.எம்.எல் உள்ளிட்ட கட்சிகளுடன் ஜனநாயகப்பூர்வமாக ஆலோசித்து, வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சதிகாரர்களின் எண்ணம் தவிடுபொடி
கூட்டணியில் பிளவு ஏற்படும் என்று காத்திருந்தவர்களின் கனவு கலைந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், “தி.மு.க. கூட்டணி என்பது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல; அது கொள்கை வழி நின்ற கூட்டணி” என உறுதிபடத் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்களின் முதிர்ச்சியான அணுகுமுறை கூட்டணியின் வலிமையை நிரூபித்துள்ளதாக அவர் பாராட்டியுள்ளார்.
நேர்காணல் தந்த உற்சாகம்
மார்ச் 17 முதல் 23 வரை நடைபெற்ற வேட்பாளர் நேர்காணலில் சுமார் 16,500 உடன்பிறப்புகள் பங்கேற்றது ஒரு கொள்கைத் திருவிழாவாக அமைந்தது. ஒவ்வொரு தொகுதியிலும் விருப்பமனு அளித்தவர்களை நேரில் சந்தித்து ஆலோசித்தது, கள நிலவரத்தை நேரடியாக அறிய உதவியாக இருந்ததாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
234 தொகுதிகளிலும் ஸ்டாலினே போட்டி!

தொண்டர்களுக்கு அவர் விடுத்துள்ள மிக முக்கியமான வேண்டுகோள் இதுதான்:
“தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளும் தி.மு.க.வின் தொகுதிகள்தான். 234 தொகுதிகளிலும் இந்த மு.க. ஸ்டாலின்தான் வேட்பாளராக நிற்கிறேன் என்ற உணர்வுடன் உடன்பிறப்புகள் களப்பணியாற்ற வேண்டும்.”
175 இடங்களில் உதயசூரியன் சின்னம் களம் கண்டாலும், கூட்டணியின் மற்ற அனைத்துச் சின்னங்களையும் (கை, முரசு, கதிர் அரிவாள், பானை, ஏணி போன்றவை) நமது சின்னங்களாகக் கருதி வெற்றிக்கு உழைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மதவாத அரசியலை வீழ்த்தவும், திராவிட மாடல் ஆட்சி தொடரவும் அடுத்த நான்கு வாரங்கள் அயராது உழைக்கத் தயாராகுமாறு தொண்டர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
