கொல்கத்தா: வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. 24 தெற்கு பர்கனாஸ் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்திலும் வன்முறை ஏற்பட்டது. இதில் சில போலீசார் காயம் அடைந்தனர். இதனிடையே, மக்கள் அமைதி காக்குமாறு மேற்கு வங்க மக்களுக்கு மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அங்கு தற்போதே தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
3 பேர் உயிரிழப்பு
இதற்கிடையே, மேற்கு வங்கத்தில் கடந்த சில நாட்களாக வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளது. இந்த போராட்டத்தில் வன்முறையும் வெடித்துள்ளது. இதில் போலீசார் உள்பட ஏராளமானோர் காயம் அடைந்தனர். மத்தி அரசு அண்மையில் வக்பு சட்ட திருத்தத்தை நிறைவேற்றியது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதில் இருந்து பல மாநிலங்களில் அதற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன.
முக்கியமாக மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத், டயமண்ட் ஹார்பர், டெல்லி மற்றும் தமிழ்நாடு போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் மேற்கு வங்கத்தில் நடைபெறும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. அங்குள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 11 மற்றும் 12-ம் தேதிகளில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
போலீசுடன் கடும் வாக்குவாதம்
ஏராளமான வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த நிலையில் இந்திய மதசார்பற்ற முன்னணி சார்பில் கொல்கத்தாவில் நேற்று வக்பு சட்டத்துக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னணியின் தலைவரும், எம்எல்ஏவுமான நவுஷாத் சித்திக் உரையாற்றினார். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வாகனங்களில் கொல்கத்தாவுக்கு கிளம்பினர்.
ஆனால் இந்த கூட்டம் அனுமதியின்றி நடத்தப்படுவதாக கூறி அவர்களை போலீசார் வழியில் தடுத்தனர். அதன்படி தெற்கு 24 பர்கானாஸ்க் மாவட்டத்தின் போஜர்காட் பகுதியில் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து ஐஎஸ்எப் தொண்டர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தடுப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு செல்ல முயன்றனர்.
சாலை மறியல் போராட்டம்
இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால், இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் போலீசாரின் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன. இந்த மோதலில் போலீசார் உள்பட ஏராளமானோர் காயம் அடைந்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசாரை கண்டித்து போராட்டக்காரர்கள் அந்த தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பல மணி நேரமாக அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். இதற்கிடையே, போராட்டத்தை கட்டுப்படுத்த உயர் அதிகாரிகள் மற்றும் ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதையடுத்து, போராட்டக்காரர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த போராட்டம் மற்றும் வன்முறையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மம்தா பானர்ஜி கோரிக்கை
இதற்கிடையே, மக்கள் அமைதி காக்குமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளர். பொதுமக்கள் சட்டம் ஒழுங்கை தங்கள் கையில் எடுக்க வேண்டாம் எனவும் மதத்தை வைத்து தேவையில்லாத விளையாட்டுக்கள் விளையாடக்கூடாது.
தர்மம் என்றால் பக்தி, பாசம், மனிதநேயம், அமைதி, நட்பு, கலாச்சாரம், நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை சக மனிதர்களை நேசிப்பது ஆகும். மனிதர்களை நேசிப்பது எந்த ஒரு மதத்த்தினுடைய உயரிய வெளிப்பாடாகும். நாம் தனியாக பிறந்தோம். தனியாக இறக்கப் போகிறோம். இதில் ஏன் நாம் சண்டை போட வேண்டும்? ஏன் வன்முறை, அமைதியின்மை.. இவ்வாறு அவர் பேசினார்.