தமிழ்நாட்டில் STEAM கல்வி அறிமுகம்: STEM-ஐ தாண்டி புதிய கல்வி அணுகுமுறை – அமைச்சர் ராஜ்மோகன்
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி முறையில் புதிய மாற்றத்தை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். தற்போதைய STEM (Science, Technology, Engineering, Mathematics) கல்வி முறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று, STEAM (Science, Technology, Engineering, Arts, Mathematics) கல்வி முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதுகுறித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் அமெரிக்காவுக்கு சென்று அந்நாட்டின் கல்வி முறைகளை ஆய்வு செய்து வந்ததாக தெரிவித்தார். அங்கு பெரும்பாலும் STEM கல்வி முறை நடைமுறையில் இருப்பதை நேரில் ஆய்வு செய்ததாகவும் அவர் கூறினார்.
அதேநேரத்தில், தமிழ்நாடு அதைவிட ஒரு படி மேலே சென்று, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்துடன் கலை (Arts) கல்வியையும் இணைக்கும் STEAM கல்வி முறையை நோக்கி நகர இருப்பதாக அமைச்சர் விளக்கமளித்தார்.
STEAM கல்வி முறை, மாணவர்களின் படைப்பாற்றல், சிந்தனைத்திறன், புதுமை உருவாக்கும் திறன் மற்றும் பிரச்சினைகளை பல்வேறு கோணங்களில் அணுகும் திறனை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியுடன் கலை மற்றும் படைப்புத் திறனையும் இணைப்பதன் மூலம் மாணவர்களின் முழுமையான திறன் வளர்ச்சியை உறுதி செய்வதே இந்த கல்வி முறையின் முக்கிய நோக்கமாகும்.
இந்த புதிய கல்வி அணுகுமுறையை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்றும், எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப மாணவர்களை உலகளாவிய போட்டிக்குத் தயார்படுத்தும் வகையில் கல்வி அமைப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
