“தபால்காரருக்கு பார்லமெண்ட் அதிகாரமா? – ஆளுநர், மத்திய ஆட்சியுடன் ஸ்டாலின் நேரடி மோதல்”
Tamilnadu

“தபால்காரருக்கு பார்லமெண்ட் அதிகாரமா? – ஆளுநர், மத்திய ஆட்சியுடன் ஸ்டாலின் நேரடி மோதல்”

Apr 20, 2025

சென்னை: “ஆளுநரின் அதிகாரம் என்பது மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே தபால்காரராக இருப்பது மட்டுமே” என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆங்கில ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

ஆளுநர் – திமுக அரசு மோதல்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் ஆளும் திமுக அரசுக்கும் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இதற்கிடையே, தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பப்பட்ட மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2023ம் ஆண்டு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஆளுநர் காலம் தாழ்த்தாமல் முடிவெடுத்திருக்க வேண்டும் என்றும், மாநில அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக ஆளுநர் இருக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. தனது சிறப்பு அதிகாரம் 142ஐ பயன்படுத்தி 10 மசோதாக்களுக்கும் நீதிமன்றம் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது.

ஆளுநர் வெறும் தபால்காரர்

இந்நிலையில் இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், “மத்திய – மாநில அரசுகளுக்கிடையேயான உறவில் ஆளுநர் என்பவர் தபால்காரர் போன்றவர்தான். தற்போதைய உச்ச நீதிமன்ற தீர்ப்பும் இதைத்தான் கூறியிருக்கிறது. தமிழ் மொழிக்கும், தமிழ்நாடு என்ற பெயருக்கும் எதிராக ஆளுநர் செயல்படுகிறார். தன்னை ஒரு தீவிர பாஜககாரராக ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டிக் கொள்கிறார். பதவிக்காலம் முடிந்த பிறகும் ஆளுநர் தமிழ்நாட்டில் உள்ளார்.” எனக் கூறியுள்ளார்.

பிரதமர் நேரம் கொடுக்கவில்லை

மேலும், அந்த பேட்டியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பற்றிய கேள்விக்கு பதில் அளித்துள்ள முதல்வர் ஸ்டாலின், “புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வதை திமுக எதிர்க்கிறது. மக்கள்தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது. தொகுதி மறுசீரமைப்பை முடக்க முயற்சிக்கவில்லை. அரசியலமைப்புச் சட்ட திருத்தத்தின் மூலம் தொகுதி மறுசீரமைப்பு ஏற்கனவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோன்று தற்போது மேலும் 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து பேச பிரதமரிடம் நேரம் கேட்டும் இதுவரை நேரம் கொடுக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

3வது முறையாக தோற்கடிப்பார்கள்

மேலும், தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்க பாஜக மும்மொழிக் கொள்கையை மறைமுகமாக திணிக்கிறது. ஆட்சியை பிடிக்க விரும்பிய அ.தி.மு.க. தலைவர்கள், பா.ஜ.க.வின் விருப்பப்படி தமிழகத்தின் மீது நீட் தேர்வை திணித்தனர் . தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருக்கும் வரை நீட் தேர்வு நடத்தப்படவில்லை. திமுக அரசுக்கு மக்கள் ஆதரவு உள்ளதால், மக்களை திசை திருப்ப வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறியுள்ளார்.

மேலும், திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறும் என்றும் பாமக இணையும் என்றும் கூறப்படுவது வதந்தி என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணி வலுவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பாஜக உடன் கூட்டணி அமைத்ததன் மூலம், தமிழ்நாட்டு மக்களுக்கு அதிமுக துரோகம் இழைத்துவிட்டதாக சாடிய முதலமைச்சர், இந்த கூட்டணியை தமிழ்நாட்டு மக்கள் மூன்றாவது முறையாக தோற்கடிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

அரசியல் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *