மஞ்சள் காமாலை, 2 அறுவை சிகிச்சைகள்… தடைகளை தாண்டி காமன்வெல்த் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டி!
வாழ்க்கையில் வந்த கடுமையான உடல்நலப் பிரச்சினைகள், காயங்கள் மற்றும் அறுவை சிகிச்சைகளை எல்லாம் கடந்து, கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துப்பாண்டி.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த 26 வயதான ராஜா முத்துப்பாண்டி, சிறுவயதிலேயே பளுதூக்கும் விளையாட்டில் ஆர்வம் காட்டி, கடின உழைப்பின் மூலம் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் தனது திறமையை நிரூபித்தார். 2017-ஆம் ஆண்டு காமன்வெல்த் இளையோர் மற்றும் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று கவனம் ஈர்த்தார்.
அவரது திறமையால் 2018-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய அணிக்குத் தேர்வானார். எனினும், தனது முதல் காமன்வெல்த் தொடரில் பதக்கம் வெல்ல முடியாமல் ஆறாவது இடத்துடன் போட்டியை நிறைவு செய்தார்.
இதன்பிறகு 2019-ஆம் ஆண்டு தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற அவர், அதே ஆண்டில் நடைபெற்ற காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் ஸ்னாட்ச் பிரிவில் எடையைத் தூக்கும் போது வலது முழங்கையில் தசைநார் கிழிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா பெருந்தொற்று காரணமாக அவரது மறுவாழ்வு பயிற்சிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
சோதனைகள் அதோடு நிற்கவில்லை. 2022-ஆம் ஆண்டு கடுமையான மஞ்சள் காமாலை பாதிப்பால் சிகிச்சை பெற்ற அவர், பின்னர் குடல்வாலழற்சி காரணமாக மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதனால் சுமார் 10 மாதங்கள் பயிற்சி மேற்கொள்ள முடியாமல் ஓய்வில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் விளையாட்டிலிருந்து விலகலாமா என்ற எண்ணம் கூட அவருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் மனம் தளராத ராஜா முத்துப்பாண்டி, உடல்நலம் தேறியதும் இரட்டிப்பு உற்சாகத்துடன் மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டார். அதன் பலனாக 2025-ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் 296 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார். பின்னர் நார்வேயில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் 299 கிலோ எடையைத் தூக்கி உலகளவில் 9-வது இடத்தையும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 5-வது இடத்தையும் பிடித்தார்.
இந்த ஆண்டு நடைபெற்ற தேசிய பளுதூக்கும் சாம்பியன்ஷிப்பில் 302 கிலோ எடையைத் தூக்கி புதிய தேசிய சாதனை படைத்த ராஜா, தற்போது கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டில் ஆடவருக்கான 65 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பதக்கம் இன்றி திரும்பிய அதே காமன்வெல்த் மேடையில் இன்று வெள்ளிப் பதக்கத்துடன் வெற்றிக் கொடி நாட்டியுள்ள ராஜா முத்துப்பாண்டியின் அடுத்த இலக்கு, ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக பதக்கம் வெல்வதே ஆகும். அவரது விடாமுயற்சியும் போராட்டமும் இளம் விளையாட்டு வீரர்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது.
