இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது இன அழிப்பு கொடுமை நடந்தி கொண்டிருக்கும் நிலையில், தற்பொழுது இஸ்ரேல் -ஈரான் மோதல் என்பது வெறும் மத்திய கிழக்கின் பிராந்தியச் சம்பவம் அல்ல; உலக அரசியல் மேடை மெதுவாக அட்லாண்டிக்(அமெரிக்கா- ஐரோப்பா இடையில் உள்ள கடல்பரப்பு) பெருங்கடலிலிருந்து இந்தியப் பெருங்கடலுக்கு நகரும் மாற்றத்தின் முக்கிய அறிகுறியாக அமைந்துள்ளது. ரஷ்யா இத்தாக்குதலை கண்டித்து மேற்கத்திய சக்திகளின் ‘அழித்து ஆளும்’ உத்தியை வெளிக்கொணர்கிறது.
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ‘முத்துமாலை’ திட்டம் ( The string of Pearls)அதற்கு எதிராக Quad கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா இணைந்திருப்பது, இந்திய பெருங்கடலில் பல ஆண்டுகளாக அமெரிக்க பிரிட்டிஷ் கூட்டில் செயல்பட்டு வரும் டியாகோ கார்சியா போன்ற ராணுவத் தளங்கள் — இவை அனைத்தும் இந்தக் கடல் பகுதியில் புதிய சக்திச் சமநிலையை உருவாக்குகின்றன.
இந்தச் சூழலில் அந்தோனியோ நெக்ரி மற்றும் மைக்கேல் ஹார்ட் எழுதிய அதிபேரமைப்புஎன்னும் நூல் முக்கியமாக நினைவிற்கு வருகிறது. இவர்கள் கூறுவது போல, 20ஆம் நூற்றாண்டின் ‘ ஏகாதியபத்திய சக்தி’ அரசுகளின் நேரடி மோதல்களோ, நிலம் பிடிக்கும் போர்களோ இப்போது மையமல்ல; அதற்கு பதிலாக ஒரு பரந்த, எல்லைகள் கடந்த ‘பன்னாட்டு அதிகாரப் பிணைப்பு’ உருவாகியுள்ளது. “Empire is… a decentered and deterritorializing apparatus of rule that progressively incorporates the entire global realm within its open, expanding frontiers,” என அவர்கள் எழுதுகின்றனர் (Empire, Preface, xii).
இந்தியப் பெருங்கடல் அதன் முக்கிய அடுக்காக மாறியுள்ளது. இஸ்ரேலின் தாக்குதல், ஈரானின் பதில், ரஷ்யாவின் கண்டனம், சீனாவின் தடங்கள், Quad-ன் நடவடிக்கைகள் ஆகியவை அனைத்தும் “அதிபேரமைப்பு” -‘Empire’ எனும் புதிய உலக ஆட்சி அமைப்பின் இயக்கங்களை பிரதிபலிக்கின்றன.
இந்த சக்திச் சுழற்சியில் இந்தியாவின் ஹிந்துத்வா கனவுகளும் (‘அகண்ட பாரதம்’, ‘விசுவகுரு’) முக்கிய இடம் பிடிக்கின்றன. அந்தமான், லட்சதீவுகள், மாலத்தீவுகள் உள்ளிட்ட பகுதிகளில் ராணுவ, வர்த்தகப் பயன்களை நோக்கிய முனைப்புகள் இந்த அகழ்வுக்கு சான்றாகின்றன.
இப்போது உலக அரசியல் மேற்கில் அல்ல; இந்தியப் பெருங்கடலின் ஆழத்தில் — வட சீன கடலில் ஆரம்பித்து, ஆபிரிக்காவின் கொம்பில் முடிகிறது ! ஒரு புதிய அதிபேரமைப்பு உருவாகுகிறது !
நெய்வேலி அசோக்
பொதுச் செயலாளர்
தோழர் களம்