இம்பால்: மணிப்பூரில் மைத்தேயி மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையே பல காலமாக மோதல் நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். இதனால் அங்குக் குடியரசுத் தலைவர் ஆட்சியும் கூட கடந்த சில ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே ஆளுநர் அஜய் குமார் பல்லாவை சந்தித்துள்ள பாஜக எம்எல்ஏக்கள் அங்கு ஆட்சி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த சில ஆண்டுகளாகவே மோதல் போக்கு நீடித்து வருகிறது. அங்கு மைத்தேயி மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாகவே மோதல் போக்கே நிலவி வந்தது. இதனால் அங்கு மிக மோசமான வன்முறைச் சம்பவங்களும் கூட நடந்துள்ளன.
மணிப்பூர் சூழல்
அங்கு கடந்த 2017 முதல் பைரன் சிங் முதல்வராக இருந்த நிலையில், அவரால் வன்முறையை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அவர் கடந்த பிப்ரவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து அங்குக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. கடந்த 3 மாதங்களாக அங்குக் குடியரசுத் தலைவர் ஆட்சியே அமலில் இருக்கிறது.
ஆட்சி அமைக்க முயற்சி
இதற்கிடையே திடீரென பாஜக எம்எல்ஏ தோக்சோம் ராதேஷ்யாம் சிங் ஆளுநர் அஜய் குமார் பல்லாவை சந்தித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மணிப்பூரில் 44 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும் புதிய அரசை அமைக்கத் தயாராக இருப்பதாகவும் ராதேஷ்யாம் சிங் தெரிவித்தார். இதற்காக 9 எம்எல்ஏக்களுடன் அவர் ஆளுநர் அஜய் குமாரை சந்தித்தார். பொதுமக்கள் இப்போது புதிய அரசுக்குத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். சபாநாயகர் சத்யபிரதா 44 எம்எல்ஏக்களையும் தனித்தனியாகவும் கூட்டாகவும் சந்தித்ததாக புதிய அரசு அமைக்க எந்த எதிர்ப்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.
எந்த கட்சிக்கு எத்தனை எம்எல்ஏக்கள்?
கடந்த 2023 மே மாதம் முதல் மணிப்பூரில் வன்முறை தொடரும் நிலையில், அங்கு 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல ஆயிரம் பேர் தங்கள் தங்களை இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். மணிப்பூரில் மொத்தம் உள்ள 60 சட்டசபை தொகுதிகளில் ஒரு இடம் மட்டுமே காலியாக உள்ளது.
அங்கு பாஜக கூட்டணிக்கு 32 மைத்தேயி எம்எல்ஏக்கள், 3 முஸ்லிம் எம்எல்ஏக்கள் மற்றும் 9 நாகா எம்எல்ஏக்கள் என மொத்தம் 44 பேர் ஆதரவாக உள்ளனர். மறுபுறம், காங்கிரஸ் கட்சிக்கு 5 மைத்தேயி எம்எல்ஏக்கள், 10 குக்கி எம்எல்ஏக்கள், 7 பாஜக அதிருப்தி எம்எல்ஏக்கள், இரண்டு குக்கி மக்கள் கூட்டணி எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு சுயேச்சை எம்எல்ஏ என மொத்தம் 25 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
திரும்பும் அமைதி
அங்குக் கடந்த சில வாரங்களாகவே மாநிலத்தில் மெல்ல அமைதி திரும்பி வருகிறது. அதேநேரம் வன்முறைக்காக ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் மைத்தேயி இன மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்காகப் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
போராட்டங்கள்
போராட்டங்கள் அதிகரித்தால் மணிப்பூர் மாநில ஆளுநர் அஜய்குமார் இம்பால் விமான நிலையத்தில் இருந்து 7 கிமீ தொலைவில் உள்ள ராஜ்பவனுக்கு கூட காரில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. வேறு வழியில்லாமல் 7 கிமீ தூரத்திற்கு அவர் ஹெலிகாப்டர் பயன்படுத்தினார். மேலும், ஹெலிபேட்டில் இருந்து ராஜ் பவன் வரையிலான 300 மீட்டருக்கும் கூட கடுமையான பாதுகாப்பு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தான் மணிப்பூரில் ஆட்சியை அமைக்க பாஜக எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.