அமெரிக்காவில் தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி- ‘துரோகி’ முத்திரை குத்திய பாஜக!
National

அமெரிக்காவில் தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி- ‘துரோகி’ முத்திரை குத்திய பாஜக!

Apr 21, 2025

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையம் சமரசமான அமைப்பாகிவிட்டது; இந்திய தேர்தல் ஆணைய அமைப்பில் ஏதோ பெரிய தவறு நிகழ்ந்துவிட்டது என்று அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சரமாரியாக குற்றம்சாட்டி இருந்தார். ஆனால் பாஜகவோ, எப்போது வெளிநாடு சென்றாலும் இந்தியாவை அவமதிக்கிறார் ராகுல் காந்தி என்று பதிலடி தந்துள்ளது.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இந்தியர்களுடனான கலந்துரையாடலில் ராகுல் காந்தி பங்கேற்றார்.

இந்த உரையாடலின் போது மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் குறித்து விவரித்தார் ராகுல் காந்தி. மேலும், மகாராஷ்ராவில் மொத்த மக்கள் தொகையை விட வாக்களித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. வாக்குப் பதிவு நாளில் மாலையிலும் இரவிலும் இரு அறிக்கைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மாலையில் வெளியிட்ட அறிக்கையைவிட இரவில் வெளியிட்ட அறிக்கையில் சுமார் 65 லட்சம் வாக்குகள் கூடுதலாக பதிவாகி இருந்தது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது எப்படி சாத்தியமாகும்? ஆகையால்தான் இந்திய தேர்தல் ஆணையம் சமரசமாகிவிட்டது; அந்த அமைப்பில் ஏதோ ஒரு தவறு நிகழ்ந்திருக்கிறது என குற்றம்சாட்டுகிறோம் என்றார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தியின் விமர்சனத்துக்கு பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து பதிலடி தந்து வருகின்றனர். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் சம்பித் பத்ரா, அமெரிக்காவின் துணை ஜனாதிபதி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால் அமெரிக்காவுக்கு போய் இந்தியாவை இழிவுபடுத்திவிட்டார் ராகுல் காந்தி. இந்தியாவுக்கு ராகுல் காந்தி துரோகம் செய்துவிட்டார். இதுதான் காங்கிரஸ் கட்சி. காலம் காலமாக இப்படித்தான் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது என்றார்.

மேலும், அன்னிய நாட்டு மண்ணில் இந்திய அரசியல் சாசனத்தை அவமதித்துவிட்டார் ராகுல் காந்தி; நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததால் விரக்தி அடைந்துவிட்டார் ராகுல் காந்தி. வெளிநாட்டு மண்ணில் இந்திய ஜனநாயகத்தையும் இழிவுபடுத்திவிட்டார் ராகுல் காந்தி என்றார் சம்பித் பத்ரா. பாஜகவின் இந்த விமர்சனத்துக்கு காங்கிரஸ் கட்சி இதுவரை பதிலளிகவில்லை.

ராகுல் காந்தி இதற்கு முன்னர் வெளிநாடு சென்ற போது இதேபோல விமர்சனங்களை முன்வைத்தார். இதனால் நாடாளுமன்றத்தில் பாஜகவினர் அமளியில் ஈடுபட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசியல் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *