மகாராஷ்டிரா முதல்வர் பதவியை விட்டு கொடுத்த ஷிண்டே; அமைச்சரவையில் சிவசேனாவுக்கு தாராளம் காட்டும் பாஜக
மகாராஷ்டிராவில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி 230 தொகுதிகளில் வெற்றி பெற்றது. முதல்வர் பதவியில் ஏக்நாத் ஷிண்டே பிடிவாதம் பிடித்ததால் ஆட்சியமைப்பில் தாமதம் ஏற்பட்டது. தற்போது, பா.ஜ.க தலைமைக்கு இணங்கி, முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க ஏக்நாத் ஷிண்டே சம்மதித்துள்ளார். இதையடுத்து தேவேந்திர பட்னாவிஸை முதல்வராக்க பா.ஜ.க திட்டமிட்டுள்ளது.
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிற்கு 12 கேபினட் அமைச்சர்கள் பதவிகள், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸுக்கு 9 பதவிகள் வழங்க பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. 43 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவையில் இரண்டு துணை முதல்வர் பதவிகள் உருவாக்கப்படவுள்ளன. இதில், அஜித் பவார் மற்றும் சிவசேனாவின் தலித் சமூகத்தைச் சேர்ந்த சஞ்சய் ஷிர்சாத்துக்கு பதவி வழங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ஏக்நாத் ஷிண்டே எடுத்த முடிவுக்கு பா.ஜ.க வரவேற்பு தெரிவித்துள்ளது. மாநில பா.ஜ.க தலைவர் சந்திரசேகர் பவன்குலே, “மகாராஷ்டிராவின் 14 கோடி மக்களின் நலனுக்காக பா.ஜ.க செயல் படுகிறது, சண்டையில்லை” என்று கூறினார்.
