விடுதலை 2: வெற்றிமாறன் பகிரும் நெருக்கடியான உருவாக்க அனுபவங்கள்
Cinema

விடுதலை 2: வெற்றிமாறன் பகிரும் நெருக்கடியான உருவாக்க அனுபவங்கள்

Dec 21, 2024
  • விடுதலை -2′ படத்தின் உருவாக்கம், அதன் பல வெர்ஷன்கள், கடைசி நேரத்தில் 8 நிமிட கட், ஓடிடி ரிலீஸ் எனப் பல விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார் இயக்குநர் வெற்றி மாறன்.

சாதி, வர்க்கம், தேசிய இன விடுதலைக்காகப் போராடும் கம்யூனிஸ்ட் தோழர்களின் கதையாக, அழுத்தமான அரசியல் பேசும் திரைப்படமாக உருவாகியிருக்கிறது இத்திரைப்படம். விஜய் சேதுபதி புரட்சிகரமான ‘வாத்தியார்’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சூரி மனிதம் கொண்ட காவலராக நடித்திருக்கிறார். இப்படம் வெளியாவதற்கு முந்தைய இரவு வரை படத்தொகுப்பு வேலைகளில் மும்முரமாக இருந்தார் இயக்குநர் வெற்றி மாறன். கடைசியாக ஒரு 8 நிமிடத்தைப் படத்திலிருந்து நீக்கிவிட்டதாகவும் கூறியிருந்தார்.

இது குறித்து சமீபத்தில் ஆர் எஸ் இன்ஃபோடயின்மென்ட் யூட்யூப் சானலுக்கு அளித்திருக்கும் நேர்காணல் பேசியிருக்கும் இயக்குநர் வெற்றி மாறன், “திரைக்கதையின் ஓட்டத்திற்குச் சரியாக இருக்காது, இந்தக் காட்சி வேறு மாதிரியான அர்த்தங்களைக் கொடுத்துவிடுமோ எனப் பல கோணங்களில் யோசனை செய்து படத்திலிருந்து 8 நிமிடத்தைக் கடைசி நேரத்தில் நீக்கிவிட்டேன். முக்கியமாக சில கதைகளைச் சொல்லும்போது படம் அதிக நேரமிருந்தால் பார்வையாளர்கள் அயர்ச்சியடைந்துவிடுவார்கள். சென்சார் போர்டுக்கு அனுப்ப இன்னும் கொஞ்சம் நேரமிருந்தால் முன்பே குறைத்து கச்சிதமாக்கியிருக்கலாம். அதற்கு நேரமில்லை. அதனால், கடைசி நேரத்தில் சென்சார் போர்டு விதிக்கு உட்பட்டு அந்த 8 நிமிடத்தைக் குறைத்தோம். எங்களால் முடிந்த அளவிற்குப் படத்தைக் கச்சிதமாக தொகுத்திருக்கிறோம். அது எப்படி இருக்கிறது என்று படம் பார்க்கிறவர்கள்தான் சொல்ல வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

Vijay Sethupathi, Manju Warrier in Viduthalai Part 2 Movie HD Images

படத்தின் பல வெர்ஷன்கள் குறித்துப் பேசிய வெற்றிமாறன், “படப்பிடிப்பில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எடுத்துவிட்டோம். தியேட்டர் வெர்ஷன், திரைப்பட விழாக்களுக்குத் தனி வெர்ஷன் எனப் பல வெர்ஷன் பண்ணி வைச்சிருக்கோம். சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிட முதல் பாகம் 4 மணி நேரமும், இரண்டாம் பாகம் மூன்று மணி நேரமும் எனத் தனி வெர்ஷன் வைத்திருக்கிறோம். ஒட்டுமொத்தமாக 8 மணி நேர படம் இது. அதுனால நான்கு பாகம்கூட வைத்திருக்கலாம். வெளிநாட்டுக்கு அனுப்பிய வெர்ஷன் வேற, இங்குத் திரையிடுகிற வெர்ஷன் வேற. வெளிநாட்டுக்கு முன்பே அனுப்பிவிட்டோம். இங்க கடைசி வரைக்கும் எடிட் செய்து அனுப்பினேன். ஓடிடி-யில் கூடுதலாக சில காட்சிகள் சேர்க்கப்பட்டு வேறு ஒரு வெர்ஷன் வெளியிடப்படும்.” என்றார்.

மேலும், “முதல் பாகம் சூரியின் வழியே கதை விரிகிறது என்பதால், சூரி வாய்ஸ் ஓவர் கொடுத்தால் நல்ல இருக்கும் என்று செய்தோம். இரண்டாம் பாகம் வாத்தியாரின் கதை வழியே கதை விரிகிறது என்பதால் விஜய் சேதுபதி வாய்ஸ் ஓவர் கொடுத்தால் நல்லா இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், இந்தக் கதையைத் தொடங்கி வைத்தது குமரேசன் (சூரி) என்பதால் இரண்டாம் பாகத்திற்கும் சூரியை வைத்தே வாய்ஸ் ஓவர் கொடுத்தோம்” என்றார்.

இதற்கிடையில் பேசிய விஜய் சேதுபதி, “இந்தப் படத்தில் நிறைய அற்புதமான காட்சிகள் இருக்கின்றன. நீக்கப்பட்ட காட்சிகளை ப்ரோமோவாக வெளியிட்டால் நல்லா இருக்கும்.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *