
ஆளுநர் யார் என முக்கியமல்ல!’ – சட்டமன்ற சர்ச்சையைப்பற்றி விஜய் பேசுகிறார்
- சட்டமன்றம் கூடும் ஒவ்வொரு முறையும், ஆளுநர் மற்றும் அரசுக்கு இடையிலான மோதல் ஒரு தொடர்கதையாகி வருகிறது. இது ஜனநாயகத்தின் அடிப்படைகளை பாதிக்கக்கூடியது. இத்தகைய போக்குகள் உடனடியாக கைவிடப்பட வேண்டும்,” என்று த.வெ.க தலைவர் விஜய் கருத்து தெரிவித்தார்.
இன்று, 2025ம் ஆண்டுக்கான முதல் தமிழக சட்டமன்றக் கூட்டத்தில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார்.
இதேப்போல கடந்த ஆண்டும் ஆளுநர் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. இன்று ஆளுநர், உரையை வாசிக்காமல் வெளியேறிய பிறகு, “அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்துக்கு இவ்வளவு அவமரியாதை செய்ததில் ஒரு தரப்பினராக இருக்கக் கூடாது என்று கடும் வேதனையுடன் அவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர்” என ஆளுநர் மாளிகை சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆளுநர் மற்றும் திமுக அரசு என இரு தரப்புகளிலும் விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் இது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், “தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழகச் சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு. பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.
ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் பொழுதும், மரபு சார்ந்த செயல்பாடுகளில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாகி வருகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, இந்தப் போக்கு கைவிடப்பட வேண்டும். மக்கள் பிரச்சனைகள் குறித்தான விவாதங்களே இடம் பெற வேண்டும்.
ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், அதன் நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிபரப்பை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சட்டமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஜனநாயக முறையில் நடைபெறும் விவாதங்களை, வெளிப்படையாகத் தமிழக மக்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும்.
எனவே சட்டமன்ற நிகழ்ச்சிகள் முழுவதையுமே எந்தவித இடையூறும் இல்லாமல் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.” என குறிப்பிட்டுள்ளார் விஜய்.