
மகிழ் திருமேனி மாஸ், அஜித் கிளாஸ், அனிருத் மரண மாஸ். தமிழ் சினிமாவின் இன்னொரு பொக்கிஷம் விடாமுயற்சி
விடாமுயற்சி – இந்த உலகமே மனைவியை பழிக்கும் போது, ஏன் அந்த மனைவியே அவரை விட்டு விலகும் போது தன் காதலின் மீதும் அவர்கள் ஒன்றாய் வாழ்ந்த வாழ்க்கையின் மீதும் “நம்பிக்கை” கொண்டு விடாமுயற்சி குணத்தால் அந்த உறவை மீட்டு வருவது தான் ஒருவரிக்கதை
அஜித் என்னும் சூப்பர் ஹீரோ அந்தஸ்த்தில் உள்ள ஒரு நபர் அவர் திரை பிம்பத்திற்கு 200 பேரை கூட அடித்து கொலை செய்து பின்னணி இசையில் அதை ஹீரோயிசம் ஆக்கியிருக்கலாம். ஆனால் அதை செய்யாமல் ஒரு சராசரி மனிதனாகவே படம் முழுவதும் ஒரு நபரை கூட தானாக கொலை செய்யாமல் இருப்பது தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய முயற்சி. தன் மனைவிக்கு இன்னொரு நபரோடு தொடர்பு இருப்பதை தெரிந்தும் அதை பக்குவமாக கடந்து அவர் தேவையை அறிந்து அதற்கேற்ப நடக்கும் விதமும் பொது சமூக சிந்தனைக்கு சற்று அப்பாற்பட்டதாகவே உள்ளது, இதற்கு ஒரு பூங்கொத்து.

தனது மனைவியை எந்த சூழ்நிலையிலும் கைவிடாத கணவனாக, வம்பிழுக்கும் ரவுடிகளுக்கு அறிவுரை சொல்லி ஒதுங்கி போவதும், தன்னை கொல்ல வருபவனை கொல்ல வாய்ப்பு கிடைத்தும் “நான் அதற்கு வரவில்லை என் மனைவி எங்கே” என்று கேட்பதும், தன்னை வேண்டாம் என்று சொல்லி மனைவி போனாலும் அவளுக்காக நிற்கும் கணவனையும், வேறு ஒருவருடன் இருக்கும் காதல் தெரிந்தும் கத்தி கூச்சல் போடாமல் சந்தேக படாமல் அவளின் உணர்வுகளுக்கு மரியாதை தரும் படம் இதுவரை நான் பார்க்கவில்லை.
திரையரங்கில் படம் பார்த்ததும் மகிழ் திருமேனி என்னும் இயக்குனருக்கு கைதட்டல்கள் கொடுப்பது தான் என்னால் முடிந்த ஒன்று, நேரில் பார்த்தால் ஒரு அன்பு முத்தம் நிச்சயம். வயதானாலும் அழகாகவே இருக்கும் திரிஷா தமிழ் சினிமாவிற்கு கிடைத்த நிரந்தர கதாநாயகி. நடிகர் அர்ஜுன் நடிப்பிலும், சண்டையிலும் மிரட்டி விட்டார். தன் காதலிக்காக அவர் எந்த எல்லைக்கும் போகும் எதார்த்தம் மேலும் வலு சேர்க்கிறது. முகம் சிதைந்த தன் காதலியை “பேரழகு” என்று வர்ணிப்பது கவிதை. ஆரவ் தனக்கு கொடுத்த வேலையை மிகவும் நேர்த்தியாக செய்திருக்கிறார். இந்த படத்தில் யாரும் எதிர்பாராத கதாபாத்திரம் ரெஜினா உடையது தான். அனைவரின் கவனத்தையும் தன் வசம் ஈர்த்த lifetime settlement வாய்ப்பு இவருக்கு.

அஜித் மாஸ் ஹீரோவாக இறங்கி அடிக்க பல வாய்ப்புகள் இருந்தும் அதை செய்யாமல் அந்த கதாபாத்திரம் எப்படி நடந்து கொள்ளும் என்பதை மட்டும் காட்சி படுத்தியது அழகோ அழகு. அவர் எதை செய்தாலும் ரசிக்க பேராதரவு தர ரசிகர்கள் இருக்க அவர் இப்படி அலட்டி கொள்ளாமல் சரியான கதைகளை தேர்ந்து எடுப்பது தமிழ் சினிமாவிற்கு மேலும் வலு சேர்க்கும்.
இந்த படத்தில் மகிழ் திருமேனி உடல் என்றால் அனிருத் தான் உயிர். இரண்டாம் பாதியில் பின்னனி இசை தான் படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர செய்கிறது. “பத்திகிச்சி” பாடல் நிஜமாகவே பத்த வைத்து விட்டது அஜித் ரசிகர்களை, சவதீகா பாடல் அவர்களை ஆடவும் வைத்தது.
இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடுவதை விட எல்லா தரப்பு மக்களும் கொண்டாடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குறை என்று பெரிதும் இல்லை, அப்படி இருந்தால் அது நம் ஆணாதிக்க பார்வையில், மனநிலையில் மட்டுமே இருக்கும். மசாலா சினிமா கண்ணாடி போட்டு பார்த்தால் மட்டுமே குறைகள் பெரிதாக தெரியும். முற்போக்கான சிந்தனை கொண்ட ஒருவருக்கு நிச்சயம் இந்த படம் ரொம்ப பிடிக்கும்.

கணவன் மனைவி இடையில் சில சமயங்களில் சுவாரசியம் இல்லாமல் போனால் விபரீத முடிவுகள் எடுக்க நேரிடும். அதை இன்னொரு கொடூர மனநிலை சரியில்லாத தம்பதிகள் தரும் “Twist & Turn” மிரட்டல்கள் மூலம் தங்களுக்குள் இருக்கும் காதல் தான் அந்த “சுவாரசியமே” என்பதை உணரும் நொடி தான் “விடாமுயற்சி”
இந்த படத்தின் வெற்றி யாரும் தங்கள் கைப்பேசியை எடுக்காமல் அடுத்து என்ன என்று அமைதியாக ஆர்வமாக பார்த்தது தான். இடம் கங்கா திரையரங்கம் கொளத்தூர், கட்டணம் 190 ரூபாய் மட்டுமே.