தமிழர் வரலாற்றைத் தேடி 45 அகழாய்வுகள்: கனிமொழி எம்.பி. கேள்விக்கு மத்திய அமைச்சர் அளித்த அதிரடிப் பதில்!
புது தில்லி: தமிழகத்தின் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் கண்டறிய 2021 முதல் 2026 வரை மொத்தம் 45 அகழாய்வுத் திட்டங்களுக்குத் தமிழ்நாடு அரசு அனுமதி கோரியுள்ளது. இது தொடர்பாகத் தூத்துக்குடி திமுக எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்விக்கு, மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளார்.
அரசு கோரிய அனுமதி விவரம்: மத்திய அரசின் தொல்லியல் ஆலோசனை வாரியத்தின் ஒப்புதலைப் பெறத் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆண்டுவாரியாக வழங்கிய பரிந்துரைகள்:
- 2021: 12 திட்டங்கள்
- 2022: 8 திட்டங்கள்
- 2023: 3 திட்டங்கள்
- 2024: 10 திட்டங்கள்
- 2025: 12 திட்டங்கள் (இதில் 8 பரிந்துரைகள் தற்போது பரிசீலனையில் உள்ளன)
கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர் முக்கியத்துவம்: ஏற்கனவே கீழடி (11-ஆம் கட்டம்), ஆதிச்சநல்லூர், சிவகளை உள்ளிட்ட இடங்களில் அகழாய்வுகள் நடந்து வரும் சூழலில், இந்த புதிய 45 பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. குறிப்பாக 2025-ல் கோரப்பட்ட 12 திட்டங்களில் 4-க்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாடு அரசின் தொல்லியல் ஆய்வுகளுக்கு மத்திய தொல்லியல் துறை (ASI) முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
