சென்னை: பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் மே 5 ஆம் தேதி வரை ஒருவாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் விதி எண் 110ன் கீழ் இந்த அறிவிப்பினை முதல்வர் வெளியிட்டார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் விதி எண் 110 கீழ் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: – திராவிட இயக்கத்தின் புரட்சிக்கவிஞர், தமிழ் இனத்தின் மறுமலர்ச்சி கவிஞர் பாரதிதாசனை போற்றும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறேன்.
பாவேந்தர் பிறந்த தினத்தை முன்னிட்டு வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் மே 5 ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு தமிழ் வார விழா கொண்டாடப்படும். இந்த ஒரு வார காலத்தில் தமிழ்நாடு முழுவதும் தமிழ் மொழியையும் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பங்களிப்பையும் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கவி அரங்கங்கள், இலக்கிய கருத்தரங்கங்கள்… எல்லாருக்கும் எல்லாம் என்று இருப்பதான இடம் நோக்கி நடக்கிறது இந்த வையம் என்ற பாவேந்தர் கவிதை வரிகளை மையப்படுத்தி அனைத்து மாவட்டங்களிலும் கவி அரங்கங்கள் மற்றும் கருத்தரங்கங்கள் நடைபெறும். சிறந்த தமிழறிஞர்கள் மற்றும் இளம் கவிஞர்கள் இதில் பங்கேற்பார்கள். பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது, தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் இளம் கவிஞர் ஒருவருக்கு பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது ஒன்று வழங்கப்படும்.