பரிணாமம் அடையும் முருகன்: பக்தி தெய்வத்திலிருந்து அரசியல் ஆயுதமாக:
Politics

பரிணாமம் அடையும் முருகன்: பக்தி தெய்வத்திலிருந்து அரசியல் ஆயுதமாக:

Jun 13, 2025

“அழகென்ற சொல்லுக்கு முருகா” என்ற பாடலும், அது மெட்டும் எப்பேர்ப்பட்ட துயரங்களிலிருந்தும் சற்று தளர்வை நமக்கு அளிக்கக்கூடிய ஒரு பாடலாக, கருணையின் அம்சமாக அமைக்கப்பட்டிருக்கும் என்றால் அது மிகையாகாது. ஒரு கடவுள் மறுப்பாளராகவே இதனை நான் குறிப்பிடுகிறேன். அப்படி கருணை, அன்பு என்ற முருகனின் முகம் எப்படி பரிணாமம் அடைகிறது ? அல்லது மாற்றப்படுகிறது ?

டார்வினின் பரிணாம வளர்ச்சி யாருக்கு பொருந்தி போகிறதோ இல்லையோ (தமிழ்) கடவுள் முருகனுக்கு பொருந்தி போகும். சங்க காலத்தில் குறிஞ்சி திணையின் “வீர” கடவுளாக இருந்தவர், பெண்கள் மேல் சாமியாக இரங்கியவார், திடீர் என்று வரலாற்றில் இருந்து மறைந்துவிட்டார். பின்னர், அருணகிரிநாதரால் பக்தி இயக்கத்தின் “கருணைத் தெய்வமாக” மாறினார். பின்னர் பாண்டியர், சோழர், பல்லவர் போன்ற அரசர்களால் பல்வேறு கோயில்களில் பார்ப்பன சூழ்ச்சி மூலம் சுவிகரிக்கப்ட்டு, பார்ப்பனிய சுப்ரமணியனாக ஆராதிக்கப்பட்டார். இவ்வாறு முருகன் ஒரு பரந்த தமிழ் சமூகத்தில், வீரம், கருணை, அன்பு, பக்தி, பார்ப்பனிய பல்வேறு தளத்தில் செழித்து வளர்ந்தார் என்று அமெரிக்க நாட்டு மானுடவியல் அறிஞர் சார்லஸ் ரெயர்சன் விளக்குகிறார்.

காலனி ஆட்சிக்கு பிறகு வட இந்தியாவில் பக்தி அரசியல் அதிகாரம் மையமானது — இராமன், கிருஷ்ணன் போன்ற கடவுள்கள் அரசியலுடன் தொடர்புடைய தெய்வங்கள் வழிபடப்படுகின்றனர். ஆனால் தென்னகத்தில் (முக்கியமாக தமிழ்நாட்டில்) முருகன் போன்ற தெய்வங்கள் மக்களிடையே தோன்றிய, பூர்வீகமான, இன அடையாளம் கொண்டவையாக, கருணை, அருள் போன்றவற்றையாகவே தொடர்ந்தன . ஆனால் இந்த வேறுபாடு இப்போது தமிழ்நாட்டில் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஈழத்தில் பௌத்தத்திற்கு எதிராக முன்னிறுத்தப்பட்ட சைவத்தை பயன்படுத்தி ” ஈழ வியாபாரிகளும்” “போலி தமிழ் தேசிய வாய் அரசியல்வாதிகளும்” முருகனை முற்றிலும் வேறு வடிவில் முன்வைத்தார். அருணகிரிநாதரின் கருணை இந்த முருகனிடம் இல்லை. அவர் போர்குணம் பெற்ற முருகனாக — தமிழர் இனத்தின் போர்த்தெய்வம் என்ற கருத்தாடல் முன்வைக்கப்பட்டது.  அதாவது, முருகன் இப்போது தமிழர் இன-சைவ அடையாளம்; சற்று ஆழ்ந்து பார்த்தால் பார்ப்பனியத்தில் மூழ்கிய சைவமாகவே உள்ளது ! 

இந்த வாய்ப்பை பாஜக முருகனை பரந்துபட்ட இந்திய ஹிந்துத் தெய்வமாக மாற்ற முயன்றது. “வேல் யாத்திரை” மூலம் சமஸ்கிருத ஹிந்து தத்துவத்தின் சின்னமாக மாற்ற முயற்சித்தது. பக்தி அரசியல் ஜாதி அடிப்படையில் மாற்றம் பெற்றது. தமிழகம் தான் எதிர்த்த ஆரிய பார்ப்பனியம், முருகனின் பெயரில் தன் பாசாங்கான நுழைவைத் தொடங்கியது.

இதில் அதிகம் அதிர்ச்சியளித்தது அப்போதைய திமுகவும் மேல் அரசியலை கையில் எடுத்தது . தோழர் கனிமொழி மட்டுமே ஒரு ஆறுதல்! ஆட்சிக்கு வந்த பிறகு, திராவிட அரசியலுக்கு முரணாக “செம்மொழி மாநாடு” நடத்துவதற்கு பதிலாக “முருகன் மாநாடும்” நடத்தியது. இது திராவிட அரசியலின் வழிநடத்தலில் பெரும் திருப்பம். மீண்டும் பக்தியிலிருந்து அரசியலுக்கு முருகன் கொண்டு வரப்பட்டார்.

சார்லஸ் ரெயர்சன் விவரித்த வடதென் பக்தி வேறுபாடு இப்போது பிழைக்கப்பட்டு போய் விட்டது. தமிழ்நாட்டில் பக்தியும், தெய்வமும் தன் இயற்கையான சமூக, கலாச்சார வடிவத்தை இழந்து தேர்தல் மற்றும் இன அரசியலுக்காக மாற்றப்படுகின்றன.

மதுரையில் சிக்கந்தர் சம்பவம், பாஜக மீண்டும் முருகன் மாநாடு நடத்தும் திட்டம், திருவாளர் சீமான் முருகனை ஈழ சைவ அடிப்படையில் அரசியலுடன் இணைக்கும் முயற்சி, திமுகவின் முருகன் மாநாடு — இவை அனைத்தும் முருகனை ஒருகாலத்தில் பன்முகப் பண்பாட்டு அடையாளமாக இருந்த இடத்திலிருந்து அரசியல் கருவியாக இழுத்து விட்டன.

இப்போது முருகன் யாருக்கானவர் என்பது தான் அரசியல் வாதம்; பக்தி கிடையாது. பாஜக, நாம் தமிழர், திமுக — யாருக்காக இந்த தெய்வம்? என்ற போட்டி. ஒருகாலத்தில் அனைத்து தமிழர்களையும் பாகுபாடின்றி ஒன்றிணைத்த முருகன் இன்று அரசியல் போரின் சின்னம்.

சார்லஸ் ரெயர்சன் பார்வையில் இயற்கை பரிணாம வளர்ச்சி இங்கே முற்றுப்பெற்றது. இப்போது அரசியல் நாடகமே முருகனை உருவாக்குகிறது. 

இப்போது நம்முள் இருக்கும் கேள்வி — தமிழர் பண்பாட்டு அடையாளங்கள் அரசியலால் நிரந்தரமாக கைப்பற்றப்படுமா? அல்லது பக்தி மீண்டும் தனி அடையாளமாக அமையுமா? 

அல்லது, ஆரம்ப காலத்தில் திராவிட இயக்கம் உருவாக்கிய மாற்று பண்பாடு எனும் தரத்தில் மீண்டும் ஒரு முறை நடை போட முயற்சிக்குமா ?

நெய்வேலி அசோக் 

பொதுச் செயலாளர் 

தோழர் களம் 

அரசியல் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *