
ஜல்லிக்கட்டு: தடைகளை தகர்த்தெறிந்து வரலாறு படைத்துக் கொண்டிருக்கும் தமிழர்களின் வரலாற்று மிக்க வீர விளையாட்டு.
கிரிக்கெட், கால்பந்து வீரர்களுக்கு கூட ஒரு வருடத்தில் ஓரிரு மாதங்கள் ஓய்வெடுப்பதற்கான வாய்ப்பு கிட்டும். ஆனால் வருடம் முழுவதும் ஓய்வில்லாமல் தை மாதம் நடக்கவிருக்கும் வீர விளையாட்டிற்காக பயிற்சி மேற்கொள்ளும் காளைகளையும், காளையர்களையும் தமிழ்நாட்டில் மட்டும் தான் காண முடியும்.
தைத் திருநாள் என்றாலே பொங்கலுக்கு அடுத்தப்படியாக ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்கள், சிறுவர்கள் என் எல்லோருக்கும் சட்டென்று கண் முன்னே வந்து நிற்பது ஜல்லிக்கட்டு.
“வாடிவாசலில் இருந்து சீறி வரும் காளைகளின் திமிலை திமிர் கொண்டு அடக்கும் காளையர்களின் வீரத்தையும், அத்திமிலின் மிது கை வைக்க வரும் காளையர்களை தன் கொம்புகளால் முட்டித் தூக்கி எறியும் காளைகளின் சாமர்த்தியத்தையும் பறைசாற்றிப் போற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு தான் ஜல்லிக்கட்டு.
ஸ்பெயின் போன்ற நாடுகளில் எருது அடக்கும் விழாக்கள் நடக்கின்றன. ஆனால் அவை விளையாட்டாகவும், பொழுதுபோக்காகவும் தான் பார்க்கப்படுகின்றன. அவை கலாச்சாரத்தின் வெளிப்பாடாகவோ அல்லது வாழ்வியலின் வெளிப்பாடாகவோ விளங்கவில்லை. ஆனால் நம் தாய் தமிழ்நாட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நம் வாழ்வியலின் ஒரு பகுதியாகவே கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாடின் மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றது. தை முதல் நாள் அவனியாபுரம், இரண்டாம் நாள் பாலமேடு, மூன்றாம் நாள் அலங்காநல்லூர் என தொடர்ந்து நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள், இந்தியாவை மட்டுமின்றி உலக நாடுகளையும் திரும்பிப் பார்க்க வைக்கிறது. பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் நம் வீர விளையாட்டை காண்பதற்காக மதுரைக்கு வருவதுண்டு.
முற்காலத்தில் ஏறுதழுவுதல் என்றழைக்கப்பட்ட இந்த வீர விளையாட்டு, பின்னர் சல்லிக்கட்டு என்றாகி, காலப்போக்கில் ஜல்லிக்கட்டானது. மாட்டின் கழுத்தில் புளியங்கம்பினால் வளையம் செய்து சுற்றியிருப்பார்கள். இதை “சல்லி” என்றழைத்தனர். ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் மாட்டின் கொம்புகளில் பரிசுக்காக காசுப் பைகளை கட்டினார்கள். இதை “ஜல்லி” என்றழைத்தார்கள். இப்படி காளையின் கழுத்திலும், கொம்புகளிலும் கட்டப்பட்டவைகளை வைத்தே இவ்விளையாட்டிற்கு பெயர்கள் சூடப்பட்டது.

ஜல்லிக்கட்டு விளையாட்டை மூன்று வகைகளாக பிரிக்கலாம். ஒன்று மதுரை மாவட்டத்தின் பாலமேட்டில் விளையாடப்படும் “மஞ்சு விரட்டு”. இதில், வாடிவாசலின் வழியாக வெளியே வரும் காளைகளை பிடித்துக் கொண்டு குறிப்பிட்ட தூரம் வரை செல்ல வேண்டும். இரண்டாவதாக, இராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகமாக விளையாடப்படும் “வெளிவிரட்டு”. இதில் காளைகள் திறந்த மைதானத்துக்குள் அனுப்பப்படும். காளை கயிற்றால் கட்டப்பட்டிருக்காது, காளை எந்த திசையிலும் ஓடலாம். அக்காளையை அடக்குவதே காளையர்களுக்கு கொடுக்கப்படும் சவால். மூன்றாவது வகை சிவகங்கை, காரைக்குடியில் பிரபலமாக நடைபெறும் “வட்டம் மஞ்சுவிரட்டு”. இதில் வட்டம் என்ற சொல் கயிறைக் குறிக்கும். 15 மீட்டர் நீளமுள்ள கயிறால் காளை கட்டப்பட்டிருக்கும். 30 நிமிடத்துக்குள் ஒன்பது பேர் காளையை அடக்க முயல்வர்.
இப்படி தமிழர்களின் வீர விளையாட்டாகத் திகழும் இந்த ஜல்லிக்கட்டுக்கு 2500 ஆண்டுகள் வரலாறு உண்டு என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

சிந்து சமவெளி, கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற அகழ்வராய்ச்சிகளில் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகளை பகுப்பாய்வு செய்யும் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் 2000 – 2500 ஆண்டுகளுக்கு பழமையானது எனபது புலப்படுகிறது” என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இதேபோல் வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள புலிமான்கோம்பை என்ற இடத்தில் காளையுடன் மல்லுக்கட்டும் வீரர் ஒருவரின் சிற்பத்துடன் “ஆகோள் ஆநிரை மீட்டப்பட்டான் கல்” என தமிழி எழுத்துக்களுடன் நடுகல் ஒன்று அகழ்வராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்டது. இந்த நடுக்கல் கி.மு.இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
1967 ஆம் ஆண்டில் மற்றொரு சான்றாக சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இவ்வீர விளையாட்டு குறித்த 6.5 அடி கொண்ட வீரக்கல் ஒன்று கண்டறியப்பட்டது. அதில் திமில் கொண்ட காளையை வீரன் அதன் கொம்பை பிடித்து அடக்குவது போலவும், அதற்கு கீழே அது பற்றிய விவரமும் இருந்தது. அந்நடுக்கல் எருதுவிளையாட்டில் இறந்து போன கோவூர் சங்கன் என்பவருக்கு எடுக்கப்பட்ட நடுகல்லாகும்.
கருவந்துறை என்னும் ஊரில் கோவூர் சங்கன் எருது விளையாட்டில் இறந்து விடுகிறார். அவரது மகன் தனது தந்தைக்கு எடுத்த நடுகல்லாக ‘சங்கன் மகன் பெரிய பயல் நட்ட கல்லு’ என்று கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது. இது 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகத்தை சேர்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரைகளை அந்த காளை தூக்கி எறிவதுமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
தமிழ் இலக்கியங்களிலும் ஜல்லிக்கட்டு பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
அதற்கு சான்றாக கலித்தொகையை குறிப்பிடலாம். கி.பி.300ல் உருவான கலித்தொகையில்
“ கொல்லேற்றுக் கோடாஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இதன் பொருள் மனிதனைக் கொல்லும் வள்ளமை கொண்ட காளையின் கொம்புக்கு அஞ்சுகின்ற இளைஞனை மறுபிறவியில் கூட பெண்கள் திருமணம் செய்ய மாட்டாள் என்பதுவே. கூர்மையான கொம்புகளையும், பரந்து விரிந்து உயர்ந்த திமிலையும் கொண்டு சீறி வரும் காளைகளை எதிர்த்துப் போராடமல் அஞ்சி ஓடும் இளைஞர்களை அக்காலத்துப் பெண்கள் விரும்ப மாட்டார்கள் என்பதையும், ஜல்லிக்கட்டின் முக்கியத்துவத்தையும் கலித்தொகை குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதன் மற்றொரு சான்றாக சிலப்பதிகார வரிகளை கூறலாம். கி.மு.5ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தில்
“மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள் முல்லையம் பூங்குழல் தான்”
என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இதன் பொருள், வளமான காளையை அடக்குபவருக்கே உரியவள் இம் முல்லை மலரை அணிந்துள்ள மென்மையான கூந்தலையுடையவள் என்பதாகும்.
இப்படியான பெரும் வரலாற்றைக் கொண்ட தமிழரின் வீர விளையாட்டிற்கு கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரு சிக்கல் ஏற்பட்டது. 2011 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் “பீட்டா” அமைப்பு ஒரு வழக்கு தொடர்ந்தது. இதனை தொடர்ந்து 2011 ஜூலை மாதம் ஜல்லிக்கட்டு காளைகளை ‘விலங்குகள் காட்சிப்படுத்துதல்’ பட்டியலில் இணைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. பிறகு 2014ம் ஆண்டு மே மாதம், ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், காட்சிபடுத்துதல் பட்டியலில் காளைகள் இருப்பதால் அவை துன்புறுத்தப்படுவதை அனுமதிக்கக் கூடாது என்று விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் நிரந்தர தடை விதித்து தீர்ப்பளித்தது. இது தமிழ்நாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சியை தந்தது. இதன் காரணமாக கடந்த 2015, 2016ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெறவில்லை.
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வலியுறுத்தி எதிர்கட்சிகள் தமிழ்நாட்டின் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தின. சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தால் தான் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க முடியும் என்றது ஒன்றிய அரசு. எதிர்கட்சிகளின் தொடர் வலியுறுத்தலையடுத்து, தமிழ்நாடு அரசு ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான சட்ட திருத்தத்தை கொண்டு வந்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் மாநில அரசால் சட்டத்தை திருத்த முடியாது என்று அழுத்த திருத்தமாக கூறியது. அன்று ஆளும் கட்சியாக இருந்த அதிமுக இவை அனைத்தையும் வேடிக்கை பார்ப்பதை தவிர, வேறு எதையும் செய்யவில்லை. காரணம் அப்போது அதிமுக, ஒன்றியத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த பாஜகவின் பிடியில் இருந்தது. ஆளுங்கட்சி இப்படி மந்தமாக செயல்பட்ட நிலையில் தான் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தமிழ்நாட்டில் வெடித்தது. இளைஞர்கள், மாணவர்கள், அவர்களுக்காக ஆதரவாக நடிகர்கள் என மெரினாவில் வரலாறு காணாத அளவில் திரண்டனர். இவர்களோடு சேர்ந்து அன்றைய எதிர்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவின் மிகப்பெரிய போராட்டமாக ஜல்லிக்கட்டு போராட்டம் வெடித்தது. இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில், தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தம் செல்லும் என்று அறிவித்தது. அதே போல் கர்நாடகாவில் எருமை மாடுகளை கொண்டு நடைபெறும் கம்பளா போட்டிக்கும் இது பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. அன்று தொடங்கி இன்று வரை ஒவ்வொறு ஆண்டும் ஐந்து மாதங்கள் ஜல்லிக்கட்டு கோலாகலமாகவும் சிறப்பாகவும் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் ஆண்கள் மட்டுமில்லாமல் பெண்களும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கெடுப்பது கடந்த சில வருடங்களாகவே வழக்கமாக இருந்து வருகிறது. ஆண்கள் காளையர்களாக பங்கெடுத்தால், பெண்கள் அக்காளைகளை வருடம் முழுவதும் தயார் படுத்தி, ஜல்லிக்கட்டு அரங்கத்தில் தங்கள் காளைகளோடு வந்து நின்று காளையர்களுடன் யுத்தம் செய்கிறார்கள். எடுத்துக்காட்டாக மதுரை, நத்தம் இடையபட்டியை சேர்ந்த ரேணுகா என்ற பெண் தனது 7 வயதிலிருந்தே ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். வறுமையான குடும்பத்தை சேர்ந்த ரேணுகா, தான் உண்ணும் உணவை விட காளைக்கு அதிக சத்துமிக்க உணவுகளை தருகிறார். போட்டிகளில் இவரே நேரடியாக வாடிவாசலுக்கு சென்று தனது காளையை அவிழ்த்து விடுகிறார். 19 வருடங்களாக 174 ஜல்லிக்கட்டு போட்டிகளில் களம் கண்ட இவரது காளைகள் இதுவரையிலும் யார் கையிலும் சிக்கியதில்லையாம். ரேணுகாவின் சாதனையை பாராட்டி மூன்று முறை “ஜல்லிக்கட்டு வீர தமிழச்சி” விருது வழங்கப்பட்டுள்ளது.
இப்படி ஜல்லிக்கட்டில் பெண்கள் காளை பராமரிப்பாளர்களாகவே இருந்த வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே ஜல்லிக்கட்டு போட்டியில் பெண்கள் காளைகளை அடக்க பங்கு கொள்ள வேண்டும் என்ற முன்னெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டின் மகளிர் தினத்தன்று பெண்களுக்கான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடிவு செய்துள்ளனர். மகளிர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க பெண் போலீஸார், கபடி வீராங்கனைகள், கல்லூரி மாணவிகள் ஆர்வமாக முன் வந்துள்ளனர். அவர்களுக்கு 3 மாத காலம் பயிற்சி அளிக்க உள்ளனர். இந்தப் போட்டியில் இலங்கை தமிழ் பெண்களும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் , அதற்காக ஆகும் செலவை தான் ஏற்பதாகவும், பல வருடங்களாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து போட்டிக்கு அனுப்பி வரும் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் கூறியுள்ளார். இதற்கான முயற்சிகளை மதுரா சுற்றுலா நிறுவன தலைவர் வி.கே.டி.பாலன் அவர்கள் மேற்கொண்டுள்ளார். ஆக இந்த 2025 ஆம் ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக பெண்கள் ஜல்லிக்கட்டை இவ்வுலகம் காண இருக்கிறது. இதற்க்கும் மக்கள் பெரிய அளவில் ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.