“குடித்துவிட்டு உயிரிழந்தால் அமைச்சரை கைது செய்வார்களா?” – அல்லு அர்ஜுன் கைதுக்கு சீமான் ஆவேச கேள்வி
Cinema

“குடித்துவிட்டு உயிரிழந்தால் அமைச்சரை கைது செய்வார்களா?” – அல்லு அர்ஜுன் கைதுக்கு சீமான் ஆவேச கேள்வி

Dec 19, 2024

திரைப்பட இயக்குநர் பாலா தனது திரைத்துறை பயணத்தில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததைக் கொண்டாடும் நிகழ்ச்சியுடன், அவரது அடுத்த படைப்பான ‘வணங்கான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நேற்று சென்னையில் விமர்சையாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் பாலாவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், சமீபத்தில் கைது செய்யப்பட்ட தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பின் போது, சீமான், “என் அன்பு தம்பி சுரேஷ் காமாட்சி தயாரித்து, ஆருயிர் இளவல் பாலா இயக்கும் ‘வணங்கான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன். திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த தம்பி பாலாவுக்கு வாழ்த்துகள்,” என கூறினார்.

அல்லு அர்ஜுனின் கைது குறித்து கேள்வி எழுப்பியபோது, “அவரை கைது செய்தது தேவையற்றது. திரையரங்கில் ஏற்பட்ட நெரிசலால் ரசிகை ஒருவர் உயிரிழந்தது ஒரு விபத்து. அதற்கு எந்த வகையிலும் நடிகர் பொறுப்பேற்க முடியாது. குடிப்பவர் உயிரிழந்தால் அந்த துறையைச் சார்ந்த அமைச்சர் கைது செய்யப்படுவாரா? அதுபோலத்தான் இதுவும்,” என அவர் கண்டனம் தெரிவித்தார்.

மேலும், “அல்லு அர்ஜுன் அந்த குடும்பத்திற்கு நிதியுதவி செய்யவுள்ளார். ஒரு நடிகரால் முடியும் அளவுக்கு அவ்விதம் செய்யலாம்,” என கூறிய அவர், இது நடிகருக்கு அவமானமாக மாறியுள்ளதாக கருத்து தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *