வாஷிங்டன்: அமெரிக்காவின் வரி விதிப்பால் உலக நாடுகள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிப்பிதுங்கி நிற்கின்றன. இப்படி இருக்கையில் இன்று காலை சர்வதேச நாடுகளின் பங்கு சந்தையில் ஏற்பட்ட திடீர் சரிவு, உலகத்தை மிகப்பெரிய மந்தநிலையை நோக்கி ஓரடி முன்னோக்கி நகர்த்தியுள்ளது.பங்கு சந்தை வீழ்ச்சியால் ஆசிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், இந்தியாவுக்கான பாதிப்பு மிகப்பெரியதாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
என்ன நடந்தது? ஜப்பான் – Nikkei 225: -6% ஆஸ்திரேலியா – ASX 200: -4% தென்கொரியா – Kospi: -4.7% சீனா – Shanghai Composite: -6% ஹாங்காங் – Hang Seng Index: -10% தைவான் – Taiwan Weighted Index: -10%
என சர்வதேச நாடுகளின் பங்கு சந்தைகள் தொடர்ந்து சரிந்தன. காரணம் அமெரிக்காவின் வரிதான். எங்கள் நாட்டுக்கு எவ்வளவு வரியை விதிக்கிறீர்களோ அவ்வளவு வரியை நாங்களும் பதிலுக்கு விதிப்போம் என்று டிரம்ப் கூறியிருந்தார். சொன்னதை போலவே வரி வசூல் விகிதங்களையும் மாற்றினார். இது முன்பு இருந்ததை விட அதிக வரியாக உயர்ந்தது. எனவே, வேறு வழியின்றி முதலீட்டாளர்கள் உஷாராக தொடங்கினார்கள். முதலீடுகள் மந்தமாகின. இதுதான் பங்கு சந்தை சரிவுக்கு மிக முக்கிய காரணம். இந்த நிகழ்வை பொருளாதார நிபுணர்கள் ‘bloodbath’ என்று கூறுகிறார்கள்.
ஆசிய நாடுகளுக்கு பாதிப்பு அதிகம் ஏன்?
உலக உற்பத்தித் தளமாக ஆசியா இருக்கிறது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஒரு நிறுவனம் தொழிற்சாலையை அமைத்தால் அதற்கான உற்பத்தி செலவுகள் அதிகம். ஆனால் ஆசிய நாடுகள் பெரும்பாலும் ஏழ்மையானதாக இருக்கிறது. எனவே, இங்கு கூலி தொடங்கி எல்லாமும் குறைவு. ஆகவேதான் எல்லா நிறுவனங்களும் முந்தியடித்துக்கொண்டு இங்கு ஓடி வருகின்றன. இது ஆசியாவை உற்பத்தித் தளமாக மாற்றியிருக்கிறது. ஆனாலும் அமெரிக்காவின் வரி இந்தியாவை பாதிக்கிறது.
அமெரிக்காவில் மந்தநிலை
முதலீடு குறைஞ்சு போச்சு, பங்கு சந்தையும் பாதாளத்தில் போயிடுச்சி இப்படியே இருந்தால் இன்னும் 12 மாதங்களில் அமெரிக்காவில் மந்தநிலை நிச்சயம் ஏற்படும். இதற்கான வாய்ப்புகள் 45% வரை இருக்கிறது என்று Goldman Sachs எனும் முதலீட்டு வங்கி மற்றும் நிதி ஆய்வு நிறுவனம் கூறியிருக்கிறது. அதேபோல JPMorgan எனும் அமெரிக்க நிதி மற்றும் முதலீட்டு வங்கி நிறுவனமும் மந்த நிலை பற்றி எச்சரித்திருக்கிறது. அமெரிக்கா மட்டுமல்லாது உலகம் முழுவதும் இதுபோன்ற மந்தநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 60% வரை இருந்தது என்று கூறியிருக்கிறது. உலகமே வீழ்ச்சியை சந்திக்கிறது என்றால் இந்தியா மட்டும் என்ன தப்பித்துக்கொள்ளுமா? இந்தியாவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டால் அதன் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். எனவே இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்பதை முன்கூட்டியே நாம் திட்டமிட வேண்டும்.