“ஆஸ்கார் கொடுக்க அவர்கள் முட்டாள்கள் அல்ல!” – விமர்சகருக்கு ஏ.ஆர். ரஹ்மான் கொடுத்த அதிரடி பதில்!
சென்னை: ஆஸ்கார் விருது வென்ற ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தின் இசை குறித்த நீண்ட கால விவாதத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது பாணியில் மிகக் காட்டமான பதிலை அளித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில், “ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கான இசை உங்களின் சிறந்த படைப்பு அல்ல; அதைவிடச் சிறந்த இசையை நீங்கள் தமிழில் கொடுத்துள்ளீர்கள்” என நேர்காணல் எடுத்தவர் குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்த ரஹ்மான், அந்தப் படத்தின் இசை ஏன் உலகத்தரம் வாய்ந்தது என்பதைத் தெள்ளத்தெளிவாக விளக்கினார்.
மேற்கத்திய நாடுகளுக்கு அது ஒரு புதுமை!
ரஹ்மான் தனது பதிலில், “ஸ்லம்டாக் மில்லியனர் எனது சிறந்த படைப்புதான். நீங்கள் அதைத் தவறாகப் புரிந்து வைத்துள்ளீர்கள். நான் அந்தப் படத்தில் கொடுத்த குறிப்பிட்ட இசைக்கலவை (Soundscape) போன்ற ஒன்று அதுவரை ஹாலிவுட்டில் இல்லை. எனவே, மேற்கத்திய மக்களுக்கு அது ஒரு சிறந்த, புதுமையான படைப்பாகத் தெரிந்தது” என்று கூறினார்.
“அவர்கள் முட்டாள்கள் அல்ல”
தொடர்ந்து பேசிய அவர், “ஆஸ்கார் விருதுக்கு வாக்களிப்பவர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. ஒரு படைப்பில் இருக்கும் நுணுக்கமான மாற்றத்தையும், புதுமையையும் உணர்ந்துதான் அவர்கள் அங்கீகாரம் வழங்குகிறார்கள். அந்த இசைக்கலவை உலக அளவில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது” எனத் துணிச்சலாகத் தெரிவித்தார்.
வழக்கமாக அமைதியாகப் பேசும் ரஹ்மான், தனது படைப்பின் மீதான விமர்சனத்திற்கு இவ்வளவு காட்டமாகப் பதிலளித்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ்த் திரையுலகில் அவர் படைத்த காவியங்கள் பல இருந்தாலும், ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தின் இசை உலக நாடுகளின் பார்வையை இந்தியா பக்கம் திருப்பியது என்பது மறுக்க முடியாத உண்மை.
