“அதிர்ச்சியும், ஏமாற்றமும்!” – மோடிக்கு பதிலடி கொடுத்த மம்தா! வங்காளத்தில் அரசியல் வெடிகுண்டு
National

“அதிர்ச்சியும், ஏமாற்றமும்!” – மோடிக்கு பதிலடி கொடுத்த மம்தா! வங்காளத்தில் அரசியல் வெடிகுண்டு

May 30, 2025

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) அரசை “நிர்மம்” (கொடூரம்) எனக் குறை கூறி, வன்முறை, ஊழல் மற்றும் சட்டமீறல் காரணமாக மாநிலம் பாதிக்கப்பட்டுள்ளது என விமர்சித்ததற்கு கடுமையாக பதிலளித்துள்ளார்.

“பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு மத்திய அரசின் பயங்கரவாத எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு ஆதரவாக அனைத்து கட்சி குழுக்கள் உலக நாடுகளுக்குச் சென்று பேசும் இந்த நேரத்தில் மோடி வங்காளத்தை விமர்சித்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது,” என மம்தா தெரிவித்தார். இந்தப் பன்னாட்டு குழுக்களில் டி.எம்.சி பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜியும் உள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கையான ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து அரசியல் செய்து விட்டதாக மோடியையும் பாஜகவையும் குற்றம் சாட்டிய மம்தா, பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகும் நிஜமான பயங்கரவாதிகள் ஏன் கைது செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பினார். “ஆபரேஷன் சிந்தூரைப் பற்றி பேச விரும்பவில்லை. ஆனால், ஒவ்வொரு பெண்மணிக்கும் மரியாதை கிடைக்கவேண்டும். உங்களது மனம் உண்மையாக இருந்தால், தாக்குதலுக்குப் பிறகும் குற்றவாளிகள் ஏன் பிடிபடவில்லை?” என்றார்.

முர்ஷிதாபாத் வன்முறையைப் பற்றிய பிரதமரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மம்தா, அந்த கலவரங்களை பாஜக மற்றும் மத்திய அரசு தூண்டியதாக குற்றம்சாட்டினார். “மால்டா மற்றும் முர்ஷிதாபாத் கலவரங்களுக்கு பாஜகதான் காரணம்,” என்று அவர் கூறினார்.

மேலும், மேற்கு வங்க மக்கள் தற்போதைய அரசுக்கு எதிராக “கூக்குரலிடுகிறார்கள்” என பிரதமர் கூறியதற்கு பதிலளித்த மம்தா, “துணிச்சல் இருந்தால் நாளையே தேர்தல் நடத்துங்கள். நாங்கள் தயாராக இருக்கிறோம், மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள்,” எனத் திட்டவட்டமாக சவால் விடுத்தார்.

அலிப்பூர்துவாரில் நடைபெற்ற ஒரு பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி, மேற்கு வங்கம் ஐந்து முக்கிய நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்:

  1. சமூக ஒற்றுமையை பிளக்கும் வன்முறையும் சட்டமின்மையும்
  2. பெண்களின் மீது நிகழும் கொடூர குற்றங்கள் மற்றும் அவர்களிடையே நிலவும் பாதுகாப்பு குறை
  3. வேலைவாய்ப்பு குறைவு காரணமாக இளைஞர்களில் ஆழ்ந்த மனச்சோர்வு
  4. பரவலான ஊழல்
  5. ஆளும் கட்சியின் சுயநல அரசியல்

மேலும், ஆசிரியர் ஆட்சேர்ப்பு ஊழல் விவகாரத்தில் டி.எம்.சி “ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் எதிர்காலத்தை நாசமாக்கி விட்டது” என்றும், இது ஒருசிலரின் நலத்தை மட்டுமல்ல, கல்வி முறை முழுமையாக சீரழிவை சந்திக்கிறது என்றும் மோடி குற்றம் சாட்டினார்.

“இன்னும் கூட, தங்களது தவறுகளை டி.எம்.சி ஒப்புக்கொள்ளவில்லை. பதிலுக்கு, நீதிமன்றங்களையும் நீதித்துறையையும் குறை கூறுகிறார்கள்,” என்றார்.

மேலும், மேற்கு வங்கத்தின் இளைஞர்கள், ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களே இந்த ஊழலின் பாதிப்பை அதிகம் அனுபவித்து வருவதாகவும், மக்கள் இப்போது டி.எம்.சி மீது நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் பிரதமர் கூறினார்.

மேலும், சமீபத்திய நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்க அரசு கலந்து கொள்ளாததை “மிகுந்த ஏமாற்றம்” எனக் கூறிய மோடி, “டிஎம்சி அரசுக்கு வளர்ச்சியைவிட அரசியல்தான் முக்கியம்” என்றும் விமர்சித்தார்.

அரசியல் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *