மகப்பேறு வார்டில் முதல்வர் ஆய்வு: “விளம்பரம் தேடுவது நல்லதல்ல” – பாலபாரதி விமர்சனம்
சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையின் மகப்பேறு வார்டில் முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு மேற்கொண்டது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி விமர்சனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில், மகப்பேறு வார்டுகள் பெண்களின் தனியுரிமை மற்றும் மருத்துவ பாதுகாப்பு மிக முக்கியமான இடங்கள் என்பதால், அங்கு அரசியல் விளம்பரத்துக்கான சூழல் உருவாக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவும், தற்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினருமான பாலபாரதி, தனது சமூக வலைதள பதிவில், “மகப்பேறு மருத்துவ வார்டு என்பது பெண்களுக்கான மிகவும் தனித்துவமான இடம். அங்கு நோயாளிகளின் கணவர் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்குக் கூட அனுமதி இல்லை. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட பெண் பராமரிப்பாளர்கள் மட்டுமே செல்ல முடியும். இந்நிலையில், முதலமைச்சர் நேரடியாக வார்டுக்குள் சென்று ஆய்வு செய்தது நல்ல நடைமுறை அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மருத்துவமனைகளில் மக்கள் பிரதிநிதிகள் ஆய்வு மேற்கொள்வது புதிய விஷயம் அல்ல என்றும், ஆனால் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ வடிவில் விளம்பரப்படுத்துவது சரியான அணுகுமுறை அல்ல என்றும் அவர் விமர்சித்தார்.
“மகப்பேறு வார்டில் சிகிச்சை பெறும் தாய்மார்களும், பச்சிளம் குழந்தைகளும் இருக்கும் சூழலில், அதிகாரிகளை தனியாக அழைத்து ஆலோசனை நடத்தலாம். நேரடியாக வார்டுக்குள் செல்வது தேவையற்றது. ஆய்வை இந்த அளவுக்கு விளம்பரமாக மாற்றினால், அது நல்ல நிர்வாக மரபாக இருக்காது” என்றும் பாலபாரதி கூறியுள்ளார்.
மருத்துவமனை ஆய்வு தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவும், அதனைத் தொடர்ந்து எழுந்துள்ள விவாதங்களும் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளன.
இதற்கிடையில், முதலமைச்சரின் மருத்துவமனை ஆய்வு பொதுமக்களின் குறைகளை நேரில் அறிந்து நடவடிக்கை எடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்படுமா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
