நெறியாளருடன் காரசார விவாதம்! அமெரிக்கத் தொலைக்காட்சி நேர்காணலில் இருந்து ட்ரம்ப் அதிரடி வெளிநடப்பு!
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் (Donald Trump) ஊடகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுவதைத் தனது வழக்கமான ஒன்றாகக் கொண்டுள்ளார்.
அவர்களின் ஊடாகவே அவர் உலக மக்களுடன் தொடர்ந்து உரையாடி வருகிறார். இந்தச் சூழலில், பிரபல அமெரிக்கத் தொலைக்காட்சி செய்தி நிறுவனமான என்பிசி நியூஸுக்கு (NBC News) அதிபர் ட்ரம்ப் அண்மையில் ஒரு பிரத்யேக நேர்காணல் அளித்தார்.
“ஆதாரம் இல்லை!” – நெறியாளரின் கேள்வியால் வெடித்த மோதல்!
மத்திய கிழக்கில் 100 நாட்களைக் கடந்த போர் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கவலை தெரிவித்த அதே நாளில், இந்த சர்வதேசப் பரபரப்பு நிகழ்ந்துள்ளது.
இந்த நேர்காணலின் போது அமெரிக்கா – ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
அப்போது ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ள ‘ஆண்டி-வெப்பனைசேஷன்’ (Anti-Weaponisation) நிதி குறித்து நெறியாளர் கிறிஸ்டன் வெல்கர் (Kristen Welker) கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த ட்ரம்ப், முந்தைய ஜோ பைடன் (Joe Biden) அரசின் மோசமான நிர்வாகமே இதற்கு முக்கியக் காரணம் எனக் கடுமையாக விமரிசித்தார்.
மேலும், முந்தைய ஆட்சியாளர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவே இந்த நிதி வழங்கப்படுகிறது என்றும் அவர் வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நெறியாளர் கிறிஸ்டன், “உங்களது இந்த குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை” எனத் தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே காரசாரமான விவாதம் வெடித்தது.
தேர்தல் முறைகேடு புகாரும் ட்ரம்பின் அதிரடி மறுப்பும்!
இதனைத் தொடர்ந்து, கலிபோர்னியா மாகாணத் தேர்தலில் (California Election) முறைகேடுகள் நடப்பதாக அதிபர் ட்ரம்ப் மற்றொரு புதிய குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ஆனால், அந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை வழக்கமான முறைப்படி தான் நேர்மையாக நடக்கிறது என நெறியாளர் கிறிஸ்டன் வெல்கர் கூறினார்.
அவரது பதிலை ஏற்க மறுத்து நிராகரித்த ட்ரம்ப், அமெரிக்க ஊடகங்கள் அனைத்தும் ஒருதலைப்பட்சமாகச் சார்பு நிலையுடன் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார்.
“ஊடகங்களைச் சரி செய்து கொள்ளுங்கள்!” – பாதியில் நின்ற நேர்காணல்!
விவாதத்தின் இறுதியில், தான் இந்த நேர்காணலை இத்துடன் நிறைவு செய்து கொள்வதாகக் கூறிவிட்டு ட்ரம்ப் பாதியிலேயே அதிரடியாக எழுந்து புறப்பட்டார்.
இந்த நேர்காணலுக்காகத் தான் மிக நீண்ட தூரம் பயணித்து வந்திருப்பதாக நெறியாளர் கிறிஸ்டன் அவரிடம் முறையிட்டார்.
அதற்குத் ட்ரம்ப், “நான் உங்களுக்குப் போதுமான நேரத்தைக் கொடுத்துவிட்டேன். முதலில் நீங்கள் உங்களது ஊடகச் செயல்பாடுகளைச் சரி செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால், நேர்மையற்ற ஊடகங்களைக் கொண்ட ஒரு நாடு, எப்போதும் சிறந்த நாடாகத் திகழ முடியாது” என்று கூறிவிட்டு அங்கிருந்து கோபமாக வெளிநடப்பு செய்தார். இந்தச் சம்பவம் தற்போது சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
