
மதுரை: எனக்கே என்னுடைய ஜாதி தெரியாது; ஆனால்… “- ஆதவ் அர்ஜுனா” பேச்சு
“திருமாவளவனுடைய கனவுகள் கூடிய விரைவில் நிறைவேறும். எல்லா விதமான அதிகாரமும் சட்டமன்றத் தேர்தலில் நிறைவேற்றப்படும், பிரச்னை வருவதைத்தான் எதிர்பார்க்கிறோம்,
அப்போதுதான் தீர்வு கிடைக்கும்…” என்று விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியிருக்கிறார்.
மதுரை விசிக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கலந்துகொண்டார். அப்போது பேசும்போது, “ஆதிக்க மன நிலையை தூக்கி எறியப்படக்கூடிய அரசியலைத்தான் நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். ஆணவப் படுகொலை அதிகமாக நடக்கக்கூடிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம் , ஆணவப்படுகொலைக்கு எதிரான விழிப்புணர்வு பள்ளிக் கல்வியிலிருந்து உருவாக்கப்பட வேண்டும். தலித் அரசியல் என்பது சாதிய அரசியல் அல்ல. மனித இனத்திற்கான அரசியல். வலதுசாரி, இடதுசாரி என பேசக் கூடியவர்கள் கூட ஆணவப் படுகொலையைப் பற்றி பேச மறுப்பது இந்த சமூகத்தின் மிகப்பெரிய துயரம்.
ஆயிரம் வருடங்களைக் கடந்தும் சமமான நிலையை உருவாக்க முடியவில்லை. கல்வி நிலையங்களில் தலித் மாணவர்கள் பெரிதாக சாதிக்க முடியவில்லை.
முக்கியமாக தலித் மக்களுக்கு பொருளாதார சுதந்திரம் இல்லை.