
பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் மகன் தமிழ் படிக்கலயா?
பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் மகன் தமிழ் படிக்கலயா? – வைரல் வீடியோவுக்கு அன்பில் மகேஸ் விளக்கம்
நேற்று இரவு நடைபெற்ற பள்ளி நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அவரது மகன் பிரெஞ்சு மொழி தேர்வு செய்தது குறித்து வைரல் ஆன வீடியோ பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “மகன் 6ஆம் வகுப்பு வரை தமிழ்ப் பாடம் படித்தார். 7ஆம் வகுப்பில் புதிய மொழி கற்க முயன்று பிரெஞ்சு தேர்வு செய்தார். அது கடினமாக இருப்பதால் தற்போது தமிழுக்கு மாறிவிட்டார்,” என்று கூறினார்.
இதனால் கவலைப்பட தேவையில்லையென தெரிவித்த அவர், “அவர் தற்போது தமிழில் தன்னுடைய கல்வியை தொடர்கிறார். திடீரென மைக் நீட்டியதால் மகன் இப்படி கூறியிருக்கலாம்,” என்று விளக்கமளித்தார். இது தொடர்பான வீடியோவும் தற்போது வைரலாகியுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை குறித்து கேட்டபோது, அமைச்சர், “தமிழ்நாடு அதனை தொடர்ந்து எதிர்த்தே செயல்பட்டு வருகிறது. மாநில கல்விக் கொள்கை குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும் பணியில் இருக்கிறோம். நம் மாநில கல்விக் கொள்கையை உறுதியாக முன்னேற்றவே தேசிய கல்விக் கொள்கையை ஏற்காமல் செயல்படுகிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.