
“தொடர் மழை, சீற்றத்துடன் காணப்படும் கடல்” – நாகப்பட்டினத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால் தமிழகத்தின் பல பகுதிகளில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், தொடர்மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றத்தால் நாகை மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது, மேலும் மீனவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
மழையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நாகை மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பாதிப்புகளை சரிசெய்ய 125 ஜேசிபி இயந்திரங்கள், 250 ஜெனரேட்டர்கள், 26,000 மணல் மூட்டைகள் உள்ளிட்ட உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சுகாதார துறையின் சார்பில் ஆம்புலன்ஸ், மருத்துவக் குழுக்கள், மற்றும் அவசர படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மிகவும் தாழ்வான பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன. 25 கடற்கரையோர கிராமங்களில் புயல் எச்சரிக்கை கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. வேளாங்கண்ணியில் கடல் சீற்றம் காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் போலீசாரால் எச்சரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.