
தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத் தீர்மானங்கள்: தேர்தல் முறைகேடுகளுக்குக் கண்டனம் – ‘ஓரணியில் தமிழ்நாடு’ வெற்றிக்கு நன்றி!
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஆகஸ்ட் 13, 2025 அன்று நடைபெற்ற தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில், நாட்டின் தேர்தல் நடைமுறைகளில் நிலவும் அசாதாரணச் சூழல்கள் குறித்தும், கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைத் திட்டம் குறித்தும் மூன்று முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1: தேர்தல் முறைகேடுகளுக்குக் கடும் கண்டனம்
தேர்தல் நடைமுறைக்கு அடிப்படை ஆவணமாக வாக்காளர் பட்டியல்தான் என்ற நிலையில், அந்த வாக்காளர் பட்டியலைத் துல்லியமாகவும், தவறுகள் இல்லாமலும் தயாரிப்பது சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலுக்கு மிக முக்கியமானது என்பதை இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அழுத்தமாக வலியுறுத்தியது.
தேர்தல் ஜனநாயகத்தைச் சிதைக்கும் வகையில், பீகார் சிறப்புத் தீவிரத் திருத்தத்தினை (SIR) எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் கடுமையான எதிர்ப்பினைப் பதிவு செய்த நிலையிலும், உச்ச நீதிமன்றமே “Mass deletion” (பல்லாயிரக்கணக்கான வாக்காளர்களை மொத்தமாக நீக்குதல்) இருந்தால் தலையிடுவோம் என்று எச்சரித்த பிறகும், பீகார் மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்களை சொத்தை காரணங்களை மேற்கோள்காட்டி தன்னிச்சையாகத் தேர்தல் ஆணையம் நீக்கியிருப்பது ஜனநாயக விரோத நடவடிக்கை என்று தீர்மானம் கண்டனம் தெரிவித்தது. இது தேர்தல் களத்தின் சமநிலையை அடியோடு அசைத்துப் பார்க்கின்ற செயல் என்றும் குறிப்பிட்டது.
மேலும், குடிமக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் தேர்தல் ஆணையத்தின் பீகார் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை எதிர்த்தும், அகில இந்திய அளவில் தேர்தல் ஆணையத்தின் துணை கொண்டு தேர்தல் களத்தில் பாஜகவின் “வாக்குத் திருட்டை” எதிர்த்தும் தேர்தல் ஆணையம் வரை பேரணி சென்ற காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்களைத் தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது FIR பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற்கொண்ட ஒன்றிய பாஜக அரசையும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையமும் தொடர்ந்து மேற்கொள்ளும் ஒரு சார்பான நடவடிக்கைகளையும் இக்கூட்டம் கடுமையாகக் கண்டிக்கிறது.
தீர்மானம் 2: நியாயமான தேர்தலுக்கு திமுகவின் கோரிக்கைகள்
தேர்தலை நடத்துவது மட்டுமல்லாமல், அதற்கான வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதும் தன்னாட்சி பெற்ற அமைப்பிடம் இருக்க வேண்டும் என அரசியலமைப்பிலேயே தேர்தல் ஆணையத்திற்கு முழுப் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் தேர்வுக் குழுவிலிருந்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி நீக்கப்பட்ட பிறகு, தேர்தல் நடத்துவதிலும், வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதிலும் தேர்தல் ஆணையம் அரசியல் சாயம் பூசிக் கொண்டு ஒன்றிய பாஜக அரசுடன் கைகோத்து நிற்பதும், பாஜகவின் தில்லுமுல்லுகளுக்குத் துணை போவதும் ஜனநாயகத்தைக் கேள்விக்குரியதாகவும், கேலிக்குரியதாகவும் மாற்றி வருவது மிகுந்த கவலையளிப்பதாக இந்தத் தீர்மானம் தெரிவிக்கிறது.
இந்திய ஜனநாயகத்தில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரணச் சூழலை எதிர்த்து நாடாளுமன்றத்திலும், வெளியிலும் கடுமையாக எதிர்ப்புக் குரல் கொடுத்து ஜனநாயகத்தின் பாதுகாவலராகத் திகழும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, திராவிட முன்னேற்றக் கழகத்தின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 2025 ஜூலை 17 அன்றே இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்து ஒரு விரிவான மனுவை அளித்துள்ளதை இக்கூட்டம் பதிவு செய்தது. அந்த மனுவில் இடம்பெற்றுள்ள மிக முக்கியமான ஐந்து கோரிக்கைகள்:
- இறந்த வாக்காளர்களை நீக்குதல்.
- BLO-க்கள் மற்றும் BLA-க்களுடன் ஒருங்கிணைப்பு.
- பிராந்திய மற்றும் உள்ளூர் மொழிகளில் தொகுப்புக் கையேடுகளை வழங்குதல்.
- அஞ்சல் வாக்கு எண்ணிக்கையில் குழப்பங்களை அகற்றுதல்.
- ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வசிப்பிட இடம் மற்றும் பிறந்த தேதியை நிரூபிக்கும் ஆவணங்களாக ஆக்க வேண்டும்.
தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் தேர்தல் நடைமுறைகளைத் தொடங்கும் முன்பே சுதந்திரமான மற்றும் நேர்மையான முறையில் வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்து உறுதிப்படுத்தும் பணியைத் தேர்தல் ஆணையம் நிறைவேற்றிட வேண்டும் எனவும் இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 3: ‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்ட வெற்றிக்கு நன்றி மற்றும் பாராட்டு
இந்தியத் தேர்தல் களத்தில் அசாதாரண மற்றும் ஆபத்தான சூழல்கள் உருவாகி வரும் நிலையில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குப் பார்வையில் செயல்படுத்தப்பட்ட கழக உறுப்பினர் சேர்க்கையான “ஓரணியில் தமிழ்நாடு” என்ற இயக்கம் – மக்கள் இயக்கமாக மாறி – இன்று தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒலிக்கும் முழக்கமாக மாறியிருப்பதை இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மன மகிழ்ச்சியுடன் பதிவு செய்தது.
முற்போக்குத் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பமும் பயன்பெறும் திராவிட மாடல் அரசை நடத்தி வரும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமைக்கு பள்ளி மாணவர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை ஒருபுறமும், பள்ளி மாணவிகள் முதல் இல்லத்தரசிகள் வரை இன்னொரு புறமும் முழுமையான ஆதரவு கரம் நீட்டுவதால், மாணவர், இளைஞர், பெண்கள், முதியோர் என அத்தனை தரப்பு மக்களின் அன்பையும் பெற்றுத் திகழ்கிறார் நமது கழகத் தலைவர் என்பதை “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கையின் போது மக்களிடம் கிடைத்த வரவேற்பின் மூலமாக உணர முடிந்தது என்று தீர்மானம் குறிப்பிட்டது.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் குவிந்துள்ள புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை – இப்போது மட்டுமல்ல – வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் – ஏன் தமிழ்நாட்டில் எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகமே முதன்மை சக்தி என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளது. அத்தோடு மட்டுமல்லாமல், மதவெறி சக்திகளுக்கும் – அவர்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து, தமிழ்நாட்டிற்குத் துரோகம் செய்வோருக்கும் இங்கே மார்க்கெட் இல்லை என்பதையும் வெட்ட வெளிச்சமாக்கி காட்டியுள்ளதாக தீர்மானம் பெருமிதம் கொண்டது.
இத்தகைய சாதனைக்குத் திட்டமிட்டதுடன், ஒவ்வொரு நாளும் கழக நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு “ஓரணியில் தமிழ்நாடு” திட்டத்தின் நிலவரத்தைக் கேட்டறிந்து ஊக்கப்படுத்தி, ஆலோசனை வழங்கும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அன்பான ஆணைக்கிணங்க, இந்தத் திட்டத்தின் மூலம் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்து – உறுப்பினர் சேர்க்கையில் மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்த அனைத்து நிலை கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தனது நன்றியையும் – பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
அரசியல் செய்திகள்