வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அந்த நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸை ஏன் சந்திக்கவில்லை? இப்போது தெற்காசிய அரசியலில் இதுதான் ஹாட் டாபிக்.
பாகிஸ்தான் மற்றும் நேபாளப் பிரதிநிதிகளுக்குக் கிடைத்த வரவேற்பு இந்தியாவுக்குக் கிடைக்கவில்லையா அல்லது இதற்குப் பின்னால் வேறு ஏதேனும் இராஜதந்திரக் காரணங்கள் உள்ளனவா? விரிவாகப் பார்ப்போம்.
நடந்தது என்ன?
காலிதா ஜியாவின் மறைவுக்குப் பிறகு, இந்தியா உட்பட அண்டை நாடுகளின் பிரதிநிதிகள் வங்கதேசம் சென்றிருந்தனர். இதில் பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் நேபாள வெளியுறவு அமைச்சரை, இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் நேரில் சந்தித்துப் பேசினார்.
ஆனால், இந்திய அமைச்சர் ஜெய்சங்கர் சென்றிருந்தபோது அத்தகைய முறையான (Formal) சந்திப்பு எதுவும் நடைபெறவில்லை. இது பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது.
முக்கியக் காரணங்களாகப் பார்க்கப்படுபவை:
- சந்திப்புகள் யாருடன் நடந்தது? ஜெய்சங்கர் முகமது யூனுஸைச் சந்திக்கவில்லை என்றாலும், வங்கதேச இடைக்கால அரசின் வெளியுறவு ஆலோசகர் தௌஹித் ஹுசைன், சட்ட ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளார். இது ஒரு மேலோட்டமான பயணம் அல்ல என்பதை உணர்த்துகிறது.
- இரங்கல் செய்தியில் இருந்த ‘நெருடல்’: இந்தியா அனுப்பிய இரங்கல் செய்தியின் மொழி நடை (Tone) குறித்து வங்கதேசத்தில் சமூக வலைதளங்களில் விவாதங்கள் கிளம்பியுள்ளன. இதுவும் ஒரு மறைமுகக் காரணமாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
- மற்ற நாடுகளின் நிலை: இந்தியாவுக்கு மட்டுமல்ல, பூட்டான், இலங்கை மற்றும் மாலத்தீவு பிரதிநிதிகளுக்கும் முகமது யூனுஸுடன் முறையான சந்திப்பு அமையவில்லை. இருப்பினும், இந்தியாவின் நிலைப்பாடு எப்போதும் உன்னிப்பாகக் கவனிப்படுவதால் இது விவாதப் பொருளாகியுள்ளது.
இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒருவித ‘மென்மையான இறுக்கம்’ நிலவி வருகிறது. குறிப்பாக, ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்திருப்பது மற்றும் வங்கதேசத்தின் தற்போதைய சூழல் ஆகியவை இந்தச் சந்திப்பு தவிர்க்கப்பட்டதற்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
