National

குஜராத்தில் நடந்த கோர விபத்தால் பங்கு சந்தையில் ஏற்படும் தாக்கம்

Jun 12, 2025

அஹமதாபாத்தில் நடந்த போயிங் ட்ரீம்லைனர் பேரழிவு: எச்சரித்துப் பரிதவித்த ஊழியர்களின் (whistleblowers)கதைகள் நினைவூட்டும் நிழலாக

இன்று மதியம் அஹமதாபாத்தில் பெரும் விமான விபத்து நிகழ்ந்தது. லண்டன் கேட்விக்கிற்குப் புறப்பட்டிருந்த ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பயணிகளைத் தாங்கிக்கொண்டு வீழ்ந்தது. இந்தியாவில் இந்த நிறுவனத்தை டாட்டா நிறுவனம் தன்வசம் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விமானத்தில் இருந்த 242 பேரும் உயிரிழந்தனர். மனித சக்தி எதுவும் செய்ய முடியாது என்று அந்த உயிர்கள் எப்படி நடுங்கி இருக்கும் என்பதை கற்பனையும் செய்யமுடியவில்லை.

2011 இல் அறிமுகமான ட்ரீம்லைனர் வகை விமானத்திற்கான முதல் பெரிய உயிரிழப்புப் பேரழிவாகும். இந்த சம்பவத்தின் உண்மை காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வரும் வேளையில், இதற்கு முன்பே பல ஆண்டுகளாக எச்சரிக்கைகளை எழுப்பிய போயிங் ஊழியர்களின் “உள் ஒழுக்க சாட்சியங்கள்” (whistleblowers) குறிப்பிடத்தக்கவை என்று தற்போது சர்வதேச ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன.

போயிங் நிறுவனத்தின் முன்னாள் தரநிலை மேற்பார்வையாளர் ஜான் “மிட்ச்” பார்னெட், இந்த ட்ரீம்லைனர் வகை விமானங்களில் இருந்த பல பாதுகாப்புக் குறைபாடுகளை வெளிக்கொணர்ந்தவர். விமானத்தின் முக்கிய மின் கம்பிகளை சேதப்படுத்தக்கூடிய உதிரி உலோகத் துகள்கள் சரியாக அகற்றப்படவில்லையெனவும், அவசர நிலை ஆக்சிஜன் வழங்கும் கருவிகள் செயல்படாதிருக்க வாய்ப்புண்டெனவும் அவர் எச்சரித்தார். அமெரிக்க விமான போக்குவரத்து ஆணையத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. ஆனால் போயிங் நிறுவனம், சட்ட அமலாக்க அமைப்புகள் இவரது மிகப் பெரிய குறைகளை மறுத்துவிட்டன. தன் வழக்குப் போராட்டத்தின் நடுவே 2024இல் பார்னெட் தற்கொலை செய்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என பலமுறை அவர் சொல்லியிருந்தது தற்போது நினைவாகியுள்ளது. இதேபோல் விண்ஸ் வெல்டன், ஜோஷுவா டீன் போன்ற பலரும் நிறுவன உள்புறப் பழுதுகளை வெளிப்படுத்தினர் என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்த விபத்தின் பின்னணி பங்கு சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. போயிங் பங்குகள் ஒரே நாளில் 8% வரை வீழ்ந்தன; முன்பு $214 இருந்த பங்கு $198 ஆக தாழ்ந்தது. ஒரு சிறிய முதலீட்டாளர் 10 பங்குகளை நேற்று வாங்கியிருந்தால், ஒரே நாளில் ₹13,000 (அமெரிக்க டாலர் மதிப்பில் $160) இழந்திருக்க வாய்ப்பு உள்ளது; 100 பங்குகள் வைத்திருந்தால் ₹1,30,000 ($1,600) இழப்பு. இது ஏற்கனவே பல ஆண்டுகளாக கடுமையான நஷ்டங்களை சந்தித்து வரும் போயிங் நிறுவனத்திற்கு ஒரு பெரிய நட்டம். 737 MAX விமானம் தொடர்பான விவகாரங்களால் கடந்த ஆறு ஆண்டுகளில் $35 பில்லியனைத் தாண்டிய இழப்பை சந்தித்திருக்கிறது.

இன்றைய இந்த பேரழிவு, பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து எச்சரித்திருந்த ஊழியர்களின் குரல்களை நினைவூட்டுகிறது. அவர்கள் சொல்லிய ஒவ்வொரு வார்த்தையும் இன்று அஹமதாபாத்தில் விழுந்த விமான பாகங்களாக உருமாறியுள்ளது. இப்போதாவது போயிங் நிறுவனம் மீது அரசாங்கம் விழிப்புடன் விசாரணை நடத்தி இழந்த உயிர்களுக்கு நியாயம் கொண்டு வர வேண்டும், இனிமேல் இப்படி ஒரு துயரம் நடக்கக் கூடாது என்பது அனைவரின் ஆவலாக இருக்கும். அப்படியே நடக்கும் என்றும் நாம் அனைவரும் மனதார நம்புவோம்.

நெய்வேலி அசோக்
பொதுச் செயலாளர்
தோழர் களம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *